கனடாவின் இனப்படுகொலை தீர்மானத்திற்கு ஜெயலலிதாவும் காரணமா..!
"இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ வெளியிட்ட அறிக்கையானது வலியால் துவண்டு போயுள்ள தமிழ் மக்களுக்கு ஆறுதலை தருகின்ற விடயமாக உள்ளது.
இதற்கு முக்கியமான காரணமாக ஜெயலலிதா இருக்கின்றார், குறிப்பாக இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பில் இந்திய மத்திய அரசிற்கு பாரிய அழுத்தங்களை கொடுத்திருந்தார்."
இவ்வாறு, ஈழத்து கலைஞர் தீபச்செல்வன் ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசின் திட்டம்

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
"2009 ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலை நிறைவு பெற்றதன் பின்னர் ஒரு கருத்து உருவாக்கப்பட்டது, அதாவது இனிமேல் இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து நாங்கள் எதையும் செய்ய முடியாது, இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களையும், படுகொலைகளையும் மறந்து அவர்களோடு இணைந்து வாழ்வது தான் உத்தமமானது.அதை மீறி செயற்பட்டால் அது எங்களை அழிக்கும்.
இப்படி ஒரு கருத்தை சொல்லக்கூடிய தரப்பு இலங்கை, இந்திய உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களில் சிறிலங்கா அரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னர், புலம்பெயர் தேசங்கள் மற்றும் தமிழ் நாட்டில் இலங்கை அரசிற்கு ஆதரவாக சிலர் மாறியிருந்தார்கள்.
அந்த நேரத்தில் தமிழக தலைவர்கள் இந்திய மத்திய அரசிற்கு அழுத்தங்களை வழங்கி இருந்தார்கள், குறிப்பாக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை, சர்வதேச அரங்கில் நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், இந்திய அரசு முதலில் இனப்படுகொலை தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் போன்ற அழுத்தங்களை வழங்கி இருந்தார்கள்.
அதேசமயத்தில் இந்த விடயத்தை மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட இலங்கை ஆட்சியாளர்கள் நகைச்சுவையாக பார்த்தார்கள், இவர்களால் என்ன செய்ய முடியும் எனக் கேட்டார்கள்.
ஒட்டுமொத்த குரல்

இதை எல்லாம் தாண்டி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் முதன்முறையாக தமிழக சட்டமன்றத்தில் இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை 2014 ஆம் ஆண்டு கொண்டு வந்தார்.
இதனைத்தொடர்ந்து, தொடர்ச்சியாக ஜெயலலிதா இந்திய மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தார், இலங்கையுடன் இந்திய பொருளாதார உறவு கொள்ளக்கூடாது, இந்திய அரசு இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், இலங்கையின் இனப்படுகொலை தொடர்பில் இந்திய சர்வதேசத்திற்கு அறிவிக்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்திருந்தார்.
இப்படியாக ஜெயலலிதா முன்வைத்த பல கோரிக்கைகள் தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த குரலாக அறிவிக்கப்பட்டது.
இப்படியான நகர்வுகளுக்கு பின்னரே வட மாகாணத்தில் இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என கனடா ஏற்றுக்கொண்டுள்ளது.
இவை எல்லாவற்றிற்கும் முதன்மை காரணமாக அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள் தான்.
புலம்பெயர் தேசம் முழுவதும் இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பில் பிரேரணைகள் முன்வைக்கப்படுவதற்கும், அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுவதற்கும் பிரதான காரணமாக ஜெயலலிதா இருக்கின்றார்." என்றார்.