இனப்படுகொலையால் லட்சக்கணக்காக உயிர்களை இழந்தது தமிழினம் மட்டுமே.!
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான சுதந்திரம் பறிக்கப்பட்ட 1948, பெப்ரவரி 04ஆம் திகதி தொடக்கம் 2009, மே,18, வரை லட்சக்கணக்கான இனப்படுகொலையை சந்தித்த ஒரே இனம் என்றால் அது தமிழினம் மட்டுமே.
ஈழவிடுதலைப் போராட்டத்தால் மூன்று இன மக்களும் (தமிழர், சிங்களவர், இஷ்லாமியர்) படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது உண்மை. ஆனால் லட்சக்கணக்கில் உயிர்ழந்தவர்கள் தமிழர்கள் தான்.
இரண்டாவது நிலையில் ஆயிரக்கணக்கில் உயிரழந்தவர்கள் சிங்கள மக்கள் தான், மூன்றாம் நிலையில் நூற்றுக்கணக்கில் உயிர் இழந்தது முஸ்லிம் மக்கள்தான் இதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.
தந்தை செல்வா தொடங்கிய அகிம்சை வழியிலான விடுதலைப்பயணம் 1949 ஆம் ஆண்டு தொடக்கம் 1977 ஆம் ஆண்டுவரை நடைபெற்றபோது நூற்றுக்கணக்கில் தமிழர்கள் கொலைசெய்யப்பட்டனர்.
தமிழ்பேசும் மக்களாக தமிழர்களும், முஸ்லிம்களும் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியால் மேற்கொண்ட சத்தியாக்கிரகப்போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம், கறுப்புக் கொடிப்போராட்டம், பேரணிகள், மகாநாடுகள், தமிழ் தபால் போராட்டம், ஶ்ரீ எதிர்ப்பு போராட்டம், வீதிமறிப்பு போராட்டம், கடையடைப்பு போராட்டம் என பல விதமான போராட்டங்களில் எல்லாம் தமிழ் தலைவர்களுடன் தமிழ் மக்களுடன், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முஸ்லிம் பொதுமக்கள் ஆண்கள் பெண்கள் எல்லோரும் ஒன்றாக கலந்துகொண்ட வரலாறுகளை மறுக்கமுடியாது.
அகிம்சை போராட்டம் ஆயுதப்போராட்டமாக ஆரம்பித்த வேளை

அதன்பின்னர் 1976, மே,14,ல் வட்டுக்கோட்டை தீர்மானம் சுதந்திர தமிழீழம் அமைக்கும் பிரேரணை தமிழர் விடுதலை கூட்டணியால் தந்தை செல்வா தலைமையில் நிறைவேற்றிய பின்னர் அகிம்சை போராட்டம் ஆயுதப்போராட்டமாக ஆரம்பித்த வேளையில் இளைஞர்கள் 36, விடுதலை இயக்கங்களை ஆரம்பித்தனர்.
இந்தக் காலத்திலும் தமிழ் இளைஞர்களுடன் முஸ்லிம் இளைஞர்களும் இணைந்து ஈழவிடுதலைப்போராட்டத்தில் இணைந்து உயிர் நீத்த வரலாறுகளையும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
தமிழ் தேசிய அரசியலுடன் பின்னிப்பிணைந்து பயணித்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமிழ் தேசிய அரசியலில் இருந்து விலகி 1981 செப்டம்பர் 21ஆம் திகதி முதன் முதலாக காத்தான்குடியில் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம்களுக்கு தனியான அரசியல் கட்சி தேவை என உணர்ந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஷ் கட்சியை உருவாக்கினார்.
பின்னர் அந்தக் கட்சியை உத்தியோகபூர்வமாக 4 வருடங்களின் பின்னர் 1986 நவம்பர் 29 இல் அரசியல் கட்சியாக அறிவித்து அங்குராப்பணக் கூட்டம் இடம்பெற்றது.
1988 பெப்ரவரி 11இல் தான் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஷ் தேர்தல் திணைக்களத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
1987 செப்டம்பர் 29 இல் சிறிலங்கா - இந்திய ஒப்பத்தம் செய்யும் காலம் வரை பெயரளவிலும், சில கரந்தடி தாக்குதல்களுடனும் செயல்பட்ட 35 விடுதலை இயக்கங்களில் ஓரிரு இயக்கம் அரசியல் நீரோட்டத்தில் அரசியல் கட்சிகளாக செயற்பட்டன.
ஏனைய பல இயக்கங்கள் தொடர்ந்து செயற்படாமல் தமது இயக்கங்களை கலைத்துவிட்டு ஒதுங்கிவிட்டன.
அந்தகக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ரெலோ, புளட், ஈபி ஆர் எல் எவ் இயக்கங்களை தடைசெய்து அவர்களுக்கு எதிராக மோதல்களை மேற்கொண்டதையும் காணலாம்.
விடுதலைக்காக போராட்டம்
இருந்த போதும் சிறிலங்கா - இந்திய ஒப்பந்தம் 1987 இல் செய்யப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகள் தவிர்ந்த வேறு எந்த இயக்கமும் விடுதலைக்காக போராடவல்லை.
அதேபோல், 1987 செப்டம்பர் 29 சிறிலங்கா இந்திய - ஒப்பந்தம் வரை கரந்தடி தாக்குதல் மட்டும் நடத்திய விடுதலைப்புலிகள் இயக்கம் அதன் பின்னர் மரபுப்படையணியாக மாறியது. மரபுப்படையணியாக வேறு எந்த தமிழ் ஆயுத இயக்கங்களும் செயல்படவில்லை.
இந்திய அமைதி காக்கும் படையினருடன் தான் முதலாம் கட்ட ஈழப்போரை 1987 அக்டோபர் 10 ஆம் திகதி தொடக்கம் 1990 மார்ச் 24 வரை மேற்கொண்டனர். இந்தியப்படை அன்றைய தினம் சிறிலங்காவை விட்டு வெளியேறியது.
1990 யூன் 10 தொடக்கம் 1994 டிசம்பர் 19 வரையும் விடுதலைப்புலிகள் இரண்டாம் கட்ட ஈழப்போரை சிறிலங்கா படையுடன் முன்னெடுத்தனர்.
1995 ஏப்ரல் 19 தொடக்கம் 1992 பெப்ரவரி 22 ஆம் திகதி வரை மூன்றாம் கட்ட ஈழப்போரை சிறிலங்கா படையினருடன் மேற்கொண்டனர்.
2006 மே மாதம் தொடக்கம் 2009 மே 18 முள்ளிவாய்க்கால் மௌனம் வரை நாலாம் கட்ட ஈழப்போர் விடுதலைப்புலிகளால் மேற்கொண்டாலும் சிறிலங்கா இராணுவத்துக்கு துணையாக பல சர்வதேச நாடுகள் செயல்பட்டன என்பது உண்மை.
சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலையால் லட்சக்கணக்கான தமிழர்கள் பலியானார்கள். அதில் ஏறக்குறைய ஐம்பாதாயிரம் மாவீரர்களும், ஏனைய இயக்கங்களைச் சேர்ந்த போராளிகளும் உயிர் நீத்தனர் என்பது உண்மை.
சிங்கள மக்களும் சிங்கள படையினரும் அடங்கலாக ஆயிரக்கணக்கானவர்கள் மாண்டுள்ளனர். முஸ்லிம் மக்களை பொறுத்தவரை 46 மாவீரர்கள் அடங்கலாக நூற்றுகணக்கானவர்கள் இறந்துள்ளனர் என்பதற்கும் மாற்றுக்கருத்துகள் இல்லை.
சிறிலங்காவில் 1915 இல் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களும் இடையில் முதன் முதலாக ஏற்பட்ட இனக்கலவரத்தின் போது தென்பகுதியில் 4075 முஸ்லிம் கடைகள் எரிக்கப்பட்டும் 85 பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டும் 136 முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டதும் சிங்களவார்களால் நடந்த மோதலாகும்.
அதன்பின்னர் 1976 ஜனவரியில் புத்தளத்தில் ஏற்பட்ட சிங்கள முஸ்லிம் இனக்கலவரத்தால் 18 முஸ்லிம்கள் காவல்துறையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்னர், இதன் எதிரொலியாக பொத்துவில் ஒரு பள்ளிவாசல் சிங்களவரால் சேதமாக்கப்பட்டது.
1982, யூலை மாதம் காலியில் ஏற்பட்ட முஸ்லிம் சிங்களவர் மோதலால் கண்டி, மாவனல்ல, கொழும்பு வரை முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். 2002 நவம்பரில் சிலாபம், புத்தளம், காலி வரை சிங்கள முஸ்லிம் இனமோதல் இடம்பெற்றது. இதனால் காலியில் ஒரு முஸ்லிம் இளைஞர் படுகொலை செய்யப்பட்டார்.
1983 ம் ஆண்டு காலப்பகுதியில் தான் தமிழ் முஸ்லிம் மக்களை பிரித்தாளும் தந்திரம் சிங்கள அரசியல் தலைவர்களால் திட்டமிடப்பட்டு விசமத்தனமான பிரசாரங்களை முஸ்லிம் மக்கள் மத்தியில் பரப்பபட்டது.
இதன் வெற்றி 1988 டிசம்பர் 18 இல் அதிபராக தெரிவான ஆர்.பிரமதாசாவின் நிறைவேற்று அதிகாரம் 1990 களில் முஸ்லிம் ஊர்காவல் படையை இனரீதியாக கிழக்கில் ஆரம்பித்தார். பிட்டும் தேங்காய் பூவும் என ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் முஸ்லிம் மக்களை முட்டி மோதும் சமூகமாக மாற்றினார்.
தமிழ் - முஸ்லிம் முரண்பாடு

இதன் விளைவு தமிழ் முஸ்லிம் மக்களிடையே குரோத மனப்பாங்கு இன்றுவரை தொடர்கிறது. 1985 இற்கு பின்னர் ஏற்பட்ட தமிழ் முஸ்லிம் முரண்பாடு மோதல்களால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் விபரம்,
1. 1985 ஏப்ரல் 07 இல் மன்னார் பள்ளிவாசலில் 06 பேர்
2.1990 யூலை 12 இல் குருக்கள்மடம் கிரான்குளம் 19 பேர்.
3.1990 ஓகஷ்ட் 03 இல் காத்தான்குடி பள்ளிவாசல் 103 பேர்
4.1990 ஓகஷ்ட் 05 இல் முள்ளியவ்காடு 17 பேர்
5.1990 ஓகஷ்ட் 06 இல் அம்பாறை 33 பேர்.
6.1990 ஓகஷ்ட் 11 இல் ஏறாவூர் 121 பேர்
7.1990 ஓகஷ்ட்11 இல் அறுகம்பை 09 பேர்
8.1990 ஆகஷ்ட் 20 இல் வாகனேரி 17 பேர்
9.1990 ஒக்டோபர் 13 இல் அரந்தலாவ 09 பேர்
10.1991 மார்ச் 24 இல் அக்கரைப்பற்று 09,பேர்
11.1991 மே 20 இல் சம்மாந்துறை 09 பேர்
12.1991 செப்டம்பர் 19 இல் புதூர் 18 பேர்
13.1991 செப்டம்பர் 19 இல் பள்ளித்திடல் 13, பேர்
14.1992 ஏப்ரல் 29 இல் அழிச்சிப்பொத்தானை 170 பேர்
15,1992 யூலை 21 இல் பறங்கிமடு 07 பேர்
16.1997 அக்டோபர் 15 இல் பட்டித்திடல் 172 பேர்.
17.1997 யூலை 20 இல் இலுப்பைக்குளம் 06 பேர்.
18.2006 செப்டம்பர் 05 இல் மூதூர் 28,பேர்.
19. 2006 செப்டம்பர் 12 இல பொத்துவில் 04 பேர்.
மொத்தமாக 770 முஸ்லிம் மக்கள் இதனால் மரணித்துள்ளனர். (இந்த தரவு அந்தந்த காலப்பகுதியில் பத்திரிகையில் வெளிவந்த செய்திகளில் திரட்டப்பட்டது)
ஓட்டமாவடி நினைவுத்தூபி திறப்பு

ஆனால் கடந்த 2023 யூன் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஓட்டமாவடியில் முஸ்லிம்கள் வாழும் கிராமத்தில் கல்குடா தியாகிகள் நினைவுத்தூபி குழுவினர் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அல் கிம்மா சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.ஹாரூன் ஸஹ்வி தலைமையில் இடம்பெற்றது.
இதில் வேடிக்கை என்னவெனில் லட்சக்கணக்காக தமிழினப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு மே 18 முள்ளிவாய்கால் நினைவு, கார்த்திகை 27, மாவீரர்நாள் நினைவு, முஸ்லிம் ஊர்காவல் படையினரை பயன்படுத்தி தமிழர்களை படுகொலைசெய்த அம்பாறை மாவட்ட திராய்மடு படுகொலை நினைவு, வீரமுனை படுகொலை நினைவு, உடும்பன்குளம் படுகொலை நினைவு, சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை, புதுக்குடியிருப்பு, காரைதீவு தொடக்கம் வாழைச்சேனை வரை 1990, ல் இடம்பெற்ற படுகொலை நாட்களை நினைவு கூர முடியாமல் கடந்த காலங்களில் தடுத்த அரசாங்கம் இன்று ஓட்டமாவடியில் யாரை நினைவு கூர இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணி என்ன என்பதெல்லாம் எவருக்கும் தெரியாமல் இல்லை. ஓட்டமாவடி நினைவுத்தூபி திறப்பு நிகழ்வின்போது கூறப்பட்ட கருத்து மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தின்போது தாய்மண்ணையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக கல்குடா முஸ்லிம் பகுதியில் உயிர்நீத்த வீரர்கள், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர்கள், கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரதேச கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் நினைவுகூரப்பட்டதாக காட்டப்பட்டது.
உண்மையில் மூன்று சகாப்தமாக உயிர்நீத்த லட்சக்கணக்கான தமிழர்களை பற்றி அங்கு நினைவு கூரப்படவில்லை. இதுவும் தமிழ் முஸ்லிம் மக்களை பிரித்தாளும் நிகழ்ச்சி் நிரலாகவும் தொடர்ந்து தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் ஒரு வேலைத்திட்டமே இது என்பதை புரிவது நல்லது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 10 மணி நேரம் முன்