குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு
இந்தியக் குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.
தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் 72ஆவது குடியரசு தினவிழா எதிர்வரும் 26 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
இதற்காக ஆண்டுதோறும் டில்லியில் 1.25 லட்சம் பார்வையாளர்களுடன் குடியரசு தின விழா நடைபெறுவது வழக்கமாக காணப்படுகின்றது.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, 25 ஆயிரம் பேர் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் இந்தாண்டும் டில்லியில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால், குடியரசு தின விழாவில் 24 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் குடியரசு தின விழா அணிவகுப்பில் ஒவ்வொரு மாநிலத்தின் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் கொண்ட அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கமாக காணப்படுகின்றது.
அந்த வகையில், இந்தாண்டு வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய தமிழகத்தின் அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், வேலுநாச்சியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என்றும் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.