தமது குடுமிச்சண்டைக்கு இந்திய துணை ஜனாதிபதியிடம் தீர்வு கேட்ட தமிழ் தரப்பினர் : கிண்டலடிக்கும் டக்ளஸ்
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஸ்ணனுடனான சந்திப்பை தமிழ் தரப்பினர் சரியாகப் பயன்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களது சந்திப்பு தமக்கிடையே இருக்கும் குடுமிச் சண்டைக்கு தீர்வு கேட்டதாகவே அமைந்திருந்தது என்றும் சாடியுள்ளார்.
இந்திய துணை ஜனாதிபதியின் இலங்கை வருகையும் தமிழ் அரசியல் தரப்பினரது சந்திப்பும் தொடர்பில் கருத்துக் கூறுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
குடுமிச் சண்டையை எடுத்துக் கூறி தீர்வு கேட்ட தமிழ் தரப்பினர்
சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் உதவி ஜனாதிபதி இலங்கை வந்திருந்த போது அவரை சந்திக்க கிடைத்த சந்தர்ப்பத்தில் தமிழ் அரசியல் தரப்பினர் தமக்கிடையே இருக்கும் குடுமிச் சண்டையை எடுத்துக் கூறி தீர்வு கேட்டதாக இருந்ததே தவிர தமிழ் மக்களுக்கான தேவைகளையோ அபிலாசைகளையோ கேட்டுப் பெற்றுக்கொள்வதற்கான ஒன்றாக அமையாதது எனக்கும் எமது மக்களுக்கும் வேதனையையும் ஏமாற்றத்தையுமளித்துள்ளது.

இன்றைய காலச்சூழலில் இந்தியாவின் துணை ஜனாதிபதி இலங்கை வருகை தந்ததானது வரவேற்கத்தக்க ஒரு செய்தி.
அதேநேரம் அவரது வருகையையும் சந்திப்பையும் தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை என்பதுதான் என்னுடைய கவலையாக இருக்கின்றது.
ஏனென்றால் கடந்தகாலத்தில் இவ்வாறு எனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களையும், நாமாகவே சந்தர்ப்பங்களை உருவாக்கியும் எமது மக்கள் தேவைகள் குறித்து நாம் சரியாக கையாண்டிருக்கின்றோம்.
இந்திய பயணத்தால் கிடைத்த நன்மைகள்
குறிப்பாக நான் 2010 இல் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட உயர்மட்டக் குழுவுடன் இந்தியா சென்றிருந்தபோது 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் 500 உழவு இயந்திரம், யாழ் கலாசார மத்திய நிலையம் உள்ளிட்ட அவசிய தேவைகளை பெற்றிருந்ததுடன் 13 ஆவது திருத்தச் சட்டமே தீர்வுக்கான ஆரம்பம், ஆனால் அது ஒரு நிரந்தர தீர்வல்ல என்றும் சுட்டிக்காட்டி வலியுறுத்தியிருந்தேன்.

அவ்வாறாக நாம் முன்னெடுத்த சந்திப்புக்கள் எமது மக்களுக்கு பல வகைகளிலும் நன்மையாகவே அமைந்திருக்கின்றது.
ஆனால் தற்போது இவர்களது இந்த சந்திப்பு என்பது தமக்குள் இருக்கும் குடுமிப்பிடி சண்டையை அவரிடம் சென்று சொல்லி தீர்வுக்காக கலந்துரையாடியது போலவும் அதேநேரத்தில் எமது மக்களுக்கிருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் அழுத்தமாக கோரிக்கைகளையோ தேவைகளையோ கோரவில்லை என்பதும் ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது.
13 ஆவது திருத்தச் சட்டம்
குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தளவில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாகவே ஒரு தீர்வை பெற்றுத்தர முயற்சிப்பார்கள். அதற்கும் மேல் அவர்கள் போகமாட்டார்கள்.

அதனடிப்படையில் அதையாவது இவர்கள் பெற்றுத்தருமாறு எடுத்துரைத்து கேட்டிருக்கலாம்.
ஆனால் இவர்கள் வழமைபோன்று தமது சுயலாப அரசியலில் இருந்துகொண்டுதான் இந்தச் சந்திப்பையும் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.
இவர்களது இந்த செயற்பாடானது மக்களை கடுமையாக வேதனையடைய வைத்துள்ளதுடன் குறிப்பாக இவர்களா எமது பிரச்சினைகளுக்கு தீர்வை பெறும் நோக்கில் இந்திய துணை ஜனாதிபதியை சந்தித்திருக்கின்றார்கள் என்றும் சலித்துக்கொள்ள வைத்துள்ளது.
அந்தவகையில் மக்கள் தேவைகள் முன்னிறுத்தப்படாது தமது குடுமிச் சண்டைக்கு தீர்வு கேட்டது போன்ற இந்த சந்திப்பு எனக்கும் வேதனையளிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |