ஜேவிபி அரசின் மாற்றம் என்பது இதுதானா...?
ஊழலற்ற மனித உரிமைகளை மதிக்கும் புதிய இலங்கையை உருவாக்குவோம் என்று முழங்கி மக்களின் வாக்குகளைப் பெற்று அரியணை ஏறிய தேசிய மக்கள் சக்தியின் அநுர அரசு, இன்று தமிழ் மக்களின் நெஞ்சில் மற்றுமொரு பாரிய இடியை இறக்கியுள்ளது.
ஓய்வுபெறப் போகிறார் என்ற ஒரே காரணத்திற்காக கடற்படைத் தளபதி காஞ்சன பனாகொடவுக்கு அட்மிரல் ஆக ஆக உயரிய பதவி உயர்வை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்றைய தினம் வழங்கியுள்ளார்.
இலங்கையின் கடந்த கால அரசுகள் போர்க்குற்றவாளிகளைக் கொண்டாடியபோது அவர்கள் இனவாதிகள் என கடந்து போக முடிந்தது.
ஆனால் சிஸ்டம் சேஞ்ச் பேசும் அநுர அரசும் அதே பாதையில் பயணிப்பது எத்தகையதொரு ஏமாற்று வித்தை ? இதற்கு திடீர் தோழர்களின் பதில் என்ன ?
1. நீங்கள் நீதியின் பக்கமா ? குற்றவாளிகளின் பக்கமா ?
இறுதிப்போரின் போது முல்லைத்தீவு, புதுமாத்தளன் பாதுகாப்பு வலையங்கள் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான கடற்படைத் தாக்குதல்கள் மற்றும் பொதுமக்கள் மீதான எறிகணைத் தாக்குதல்களுக்கு கட்டளைப் பொறுப்பு வகித்த அதிகாரிகளுக்கு மகுடம் சூட்டுவதுதான் நீங்கள் கூறும் புதிய இலங்கையா ?
2. காணாமல் ஆக்கப்பட்டோரின் கண்ணீருக்கு பதில் என்ன ?
கொழும்பிலும் திருகோணமலையிலும் தமிழ் இளைஞர்கள் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டு பின்னர் கொடூரமாகக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் (Navy 11 Case) நடந்தபோது கடற்படையின் உயர் பொறுப்புகளில் இருந்தவர்களுக்கு அது தெரியாமல் இருந்திருக்குமா ?
பாதிக்கப்பட்ட தாய்மார்களின் கண்ணீரை விட இந்த அதிகாரிகளின் தோள்களில் ஏறும் நட்சத்திரங்கள் உங்களுக்குப் பெரிதாகிவிட்டதா ?
3. சர்வதேச தடைகளை புறந்தள்ளுகிறதா அரசு?
சர்வதேச மனித உரிமை அமைப்புகளாலும் ஐநா நிபுணர் குழுக்களாலும் (ITJP, UNHRC) போர்க்குற்றப் பட்டியலிலும் பயணத் தடைகளுக்கான பரிந்துரைகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்குத் தொடர்ந்து பதவி உயர்வு வழங்குவதன் மூலம் சர்வதேச சட்டங்களை நாங்கள் மதிக்க மாட்டோம் என்ற ராஜபக்சாக்களின் அதே திமிரான அரசியலையா ஜே.வி.பி அரசும் கையில் எடுத்துள்ளது.
4. அப்படியென்றால் தமிழ் மக்களின் வாக்குகள் எதற்கு ?
வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் இந்த ஆட்சியைத் தண்டிப்பதற்காக வாக்களிக்கவில்லை தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற மிகச்சிறிய நம்பிக்கையில்தான் வாக்களித்தார்கள்.
இன்று போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் நம்பிக்கையை அநுர அரசு மிகக் கொடூரமாகக் குத்திக் கிழித்துள்ளது.
இராணுவக் கட்டமைப்புக்குள் இருக்கும் சிங்கள-பௌத்த பேரினவாத வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்துவதற்காக நீதியையும் பொறுப்புக்கூறலையும் அநுர அரசு பலியிட்டுள்ளது.
மகிந்த செய்யும்போது பிழையாகத் தெரிந்த போர்க்குற்றப் பாதுகாப்பு அநுர அரசு செய்யும் போது எப்படிச் சரியாகும் ? பதவிகளும் பட்டங்களும் மாறலாம் ஆனால் முள்ளிவாய்க்காலிலும் கடற்படைத் தளங்களிலும் சிந்தப்பட்ட அப்பாவிகளின் இரத்தம் ஒருபோதும் மறையாது...!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |