கொத்துக் கொத்தாக மண்ணுக்குள் புதைக்கப்பட்ட தமிழர்கள் : செம்மணியில் வெடித்த போராட்டம்
புதிய இணைப்பு
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்படுகின்ற ”அணையா விளக்கு” போராட்டம் செம்மணியில் 1996களில் சருகாகிப் போன கிருசாந்தியின் உறவினரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 10.10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தில் சமயத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இழந்த உறவுகளுக்கான நீதியை தேடி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - செம்மணியில் எலும்புக் கூடுகளாக மீட்கப்படும் உறவுகளுக்கு நீதி வேண்டி அணையா விளக்கு ஏற்றப்பட்டு முன்னெடுக்கப்படும் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் செம்மணி மண்ணில் புதையுண்டுபோன உறவுகளுக்கு, நீதி வேண்டிய ''அணையா விளக்கு" என்ற பெயரில் 23,24,25 ஆகிய 3 நாட்களுக்கு இரவு பகலாக விளக்கு ஏற்றி அகிம்சை வழியில் உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஐக்கிய நாடுகள் உயர் அதிகாரியின் பார்வைக்கு, குறித்த பிரச்சினையின் ஆழத்தை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |














