இலங்கையில் தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் : முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கோடீஸ்வரன் எம்.பி
இலங்கையில் தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு எனவும் அதுவே சர்வதேசத்திடம் நாங்கள் கோரும் சுயநிர்ணய உரிமையாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் இன்று (18) இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றிவைத்த பின்னர் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக பிரதான வீதியில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வும் கஞ்சி விநியோகமும் இன்று(18) இடம்பெற்றது.
நினைவேந்தலில் கலந்துகொண்டோர்
இந்த நிகழ்வில், கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண. ரண்முத்துகல சங்கரத்ன தேரர், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இ.ரூபசாந்தன், காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில், சமுக செயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய கோடீஸ்வரன் “மே 18முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து இன்றுடன் 17ஆண்டுகள் கடந்த நிலையிலும், எங்களது மனதிலிருந்து இந்த கவலைகள், வடுக்கள், ஆறாரணங்கள் மாறப்போவதில்லை.

தமிழினப் படுகொலையானது திட்டமிடப்பட்ட வகையிலே இலங்கை அரசாங்கத்தோடும், சர்வதேச நாடுகளின் பக்கத்துணையாகவும் நின்று செயற்படுத்தப்பட்டதை நாங்கள் என்றும் மறக்கப்போவதில்லை.
எந்த நோக்கத்திற்காக இந்த மக்கள் முள்ளிவாய்க்காலிலே உயிர் நீத்தார்களோ, அந்த நோக்கத்தை அடைகின்றவர்களாக, அந்த நோக்கத்தைப் பெறுகின்றவர்களாக நாங்கள் போராட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இலட்சக்கணக்கான மக்கள் இந்த மண்ணிலே வித்தாகி இருக்கின்றார்கள். இலட்சக்கணக்கான போராளிகள் இந்த மண்ணிலே உயிர் நீத்திருக்கின்றார்கள். அவர்களது எண்ணத்தையும் சிந்தனையும் சுமந்தவர்களாக நாங்கள் பயணிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
சர்வதேச சமூகத்திடம் நீதி கோரல்
இந்த 17 வருடங்கள் கடந்த நிலையிலும் நாங்கள் சர்வதேசத்திடம் வேண்டி நிற்பது என்னவென்றால், எங்களது தமிழர்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும், எங்களுக்கான உரிமை கிடைக்க வேண்டும் என்றுதான் நாங்கள் இன்று சர்வதேச சமூகத்திடம் நீதி வேண்டி நிற்கின்றோம்.

2009-ஆம் ஆண்டு ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டாலும், எங்களது அரசியல் ரீதியான முன்னெடுப்புகள், தமிழர்களின் உரிமையைச் சார்ந்து, தமிழர்களின் உரிமை சார்ந்த விடயங்களை முன்னெடுத்து நாங்கள் சர்வதேச நாடுகளுக்கும் ஏனைய அமைப்புகளுக்கும் தொடர்ச்சியான அழுத்தங்களை கொடுப்போம்.
எங்களது விடிவு கிடைக்கும் வரை நாங்கள் அந்தத் தொடர்ச்சியான அழுத்தங்களை சர்வதேசத்திற்குக் கொடுத்து நிற்போம் என்கிற இந்த செய்தியையும் இந்த இடத்திலே கூறிக்கொள்கின்றேன்.
தமிழர்கள் தமிழர்களை ஆள வேண்டும் என்கின்ற அந்த ஒரேயொரு தேவைப்பாட்டைத்தான் நாங்கள் சர்வதேசத்திடம் முன்வைக்கின்ற ஒரு கோரிக்கையாக இருக்கின்றது என்பதனை இந்த இடத்திலே தெளிவாகக் கூறிக்கொள்கின்றேன்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |