வீட்டுப்பாடம் செய்யவில்லை : மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்
வீட்டுப்பாடம் செய்யாத காரணத்துக்காக ஆசிரியர் ஒருவர் மாணவியின் வாய்த்தாடை உடையும் வரை தாக்கியுள்ளார். அக்கரப்பத்தனை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவியே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
கடந்த 5 ஆம் திகதி, பாடசாலை நேரத்தில் இந்தசம்பவம் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதி
தாக்குதலுக்கு இலக்கான மாணவி, அக்கரப்பத்தனை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அம்மாணவியின் நிலைமை பாரதூரமாக இருந்துள்ளதால் அக்கரப்பத்தனை வைத்தியசாலை நிர்வாகம் பொறுப்பேற்க மறுத்துள்ளது,
பின்னர் மாணவி நேரடியாக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இன்று வரை மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
வெளிநாட்டில் பணிபுரியும் தாய்
தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில் தனது பிள்ளைகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு தாய் வெளிநாட்டில் பணிபுரிகின்றார்.
மாணவி ,தாத்தா, பாட்டியின் பராமரிப்பிலேயே வளர்ந்து வருகின்றார். இம்மூன்று சகோதரிகளும் பாடசாலையில் தான் கல்வி பயின்று வருகின்றனர்.
மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் முன்னர் சேவையாற்றிய பாடசாலையில் இருந்து தண்டனைக்குரிய குற்றத்திற்காக இடமாற்றப்பட்டவர் எனக் கூறப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
