சப்ரகமுவ பல்கலைக்கழக விவகாரம் : முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் (Sabaragamuwa University of Sri Lanka) இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைக்கேடுகள் குறித்து விசாரிப்பதற்காகச் சுயாதீன குழுவொன்றை நியமிக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், தற்போதுள்ள கட்டுப்பாட்டு அதிகாரியைக் குறித்த குழுவில் உள்ளடக்காமல் சுயாதீன குழுவை நியமிக்குமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளருக்கு கோப் குழு பரிந்துரைத்துள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் கல்வியாண்டில் பயின்ற சரித் டில்சான் என்ற மாணவன் தமது உயிரை மாய்த்துக் கொண்டமை தொடர்பில் கோப் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகம்
குறித்த மாணவன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் குறித்து முறையான விசாரணைகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் முன்னெடுக்கவில்லை என கோப் குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதற்கான விசாரணைகளை முன்னெடுப்பதற்காகச் சுயாதீன குழுவொன்றை நியமிக்குமாறும் இதன்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மாணவர் விடுதிகளில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்தும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவில் முன்னிலையாகியிருந்த அதிகாரிகள் குறிப்பிட்டதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
