பயங்கரவாத தடைச்சட்டம் பயங்கரமானது - சாணக்கியன்
உண்மையிலேயே இந்தப் பயங்கரவாத தடைச்சட்டமானது ஒரு பயங்கரமாதொரு சட்டம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளை இன்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது.
இந்தப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் எங்களை சந்தித்து தங்களது உறவினர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த காலத்தில் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என நானும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனும் வடக்கு கிழக்கிற்கு வெளியிலே முக்கிய வேலைத்திட்டத்தினை முன்னெடுத்திருந்தோம்” என்றார்.
