தாஜூதீன் கொலை தொடர்பில் உண்மைகள் விரைவில் - உச்சக்கட்ட கலக்கத்தில் குடும்பம்
முன்னாள் ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகள் தீவிரமடைந்துள்ளதால் சிலர் கலக்கமடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல (Sunil Watagala) தெரிவித்துள்ளார்.
அந்தக் கலக்கத்துக்கும் தாஜூதீன் கொலைக்கும் இடையிலான தொடர்புகள் என்ன என்பது வெகுவிரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என்றும் சுனில் வட்டகல குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட ஒரு குடும்பமே கலக்கத்தில்
அவர் மேலும் கூறுகையில், "வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே சிலர் கலக்கமடைந்துள்ளனர்.
இந்தக் கலக்கத்துக்கும் தாஜூதீன் கொலைக்கும் இடையிலான தொடர்புகள் என்ன என்பது விசாரணைகள் மூலம் வெளிப்படும்.
குறிப்பிட்ட ஒரு குடும்பமே இவ்வாறு அளவுக்கதிக கலக்கத்தில் உள்ளது. அந்தக் குடும்பம் ராஜபக்ஷ குடும்பமா அல்லது வேறு குடும்பமா என்பதை எம்மால் கூற முடியாது.
ஆனால், விசாரணைகளுக்கமைய உண்மைகள் வெளிப்படுத்தப்படும். கைது செய்யப்படுபவர்களின் வாக்குமூலங்கள் பெறப்படும்.
மேலதிக விசாரணை
அவ்வாறான வாக்குமூலங்களில் இருந்து கிடைக்கக் கூடிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேலதிக விசாரணைகள் எவ்வித தடைகளும் இன்றி முன்னெடுக்கப்படும்.
யாரும் பயப்பட வேண்டிய தேவையில்லை. விசாரணைகள் மூலம் நிச்சயம் நாட்டுக்கு உண்மைகள் வெகுவிரைவில் வெளிப்படுத்தப்படும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
