வவுனியாவில் நினைவுகூரப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் நினைவு தினம்
ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நேற்று(28.04) மதியம் இடம்பெற்றது.
வவுனியா ஊடக அமையத்தின் தலைவர் ப.கார்த்தீபன் தலைமையில் அமையத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வில் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் படத்திற்கு மெழுவர்த்தி ஏத்தியும், மலர்தூபியும் அஞ்சலி செலுத்தினர்.
இதன்பின் சிரேஸ்ட ஊடகவியலாளர் ந.கபிலநாத் மற்றும் வவுனியா ஊடக அமையத்தின் செயலாளர் கி.வசந்தரூபன் ஆகியோரினால் தராக்கி சிவராம் தொடர்பில் நினைவு உரைகளும் இடம்பெற்றன.
பயங்கரவாத தடைச்சட்டம்

இதன்போது, தராக்கி சிவராம் கொலை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவரது கொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை எனவும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் நீதியான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அதற்கு தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளும் நாடாளுமன்றம் ஊடாக அழுத்தம் கொடுக்க வேண்டும் ஊடகவியலாளர்கள் கோரிக்கையினை முன்வைத்தனர்.
அத்துடன், தற்போது நடைமுறைப்படுத்தவுள்ள புதிய பயங்கரவாத தடைச்சட்டமும் ஊடகவியலாளரின் செயற்பாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அறிகின்றோம்.
அதற்கு எதிராகவும் ஊடகவியலாளர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது.
புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைபை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ஊடகவியலாளர்கள் இதன்போது கோரிக்கை முன்வைத்தனர்.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.









