வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த திருவிழா : விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த இரண்டாவது ஏற்பாட்டு கூட்டம் இன்று யாழ் மாநகர சபையில் நடைபெற்றது.
ஏற்கனவே நடைபெற்ற முதலாவது முன்னாயத்த குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இன்றைய தினமும்11 மீளவும் கலந்துரையாடி சில கட்டுப்பாடுகள் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் பொதுமக்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் தொடர்பில் யாழ் மாநகர ஆணையாளர் த. ஜெயசீலன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..,
நல்லூர்க் கந்தன் ஆலய திருவிழா இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில் இம்முறையும் வழமை போன்று மாநகர சபை தனது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது எனத் தெரிவித்தார்.
19 ஆம் திகதி வீதித் தடைகள்

எதிர்வரும் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கு முன்னேற்பாடாக 19 ஆம் திகதியே வீதித் தடைகள் போடப்பட இருக்கின்றன.
அந்த வீதித் தடைகளிலே வழமை போன்று காவல்துறையினரும் மாநகர சபை பணியாளர்களும் இருப்பார்கள். இந்த வீதித் தடை காலப்பகுதியில் குறிப்பாக பருத்தித்துறை வீதியால் பயணிக்கின்ற வாகனங்களுக்கு மாற்று வழிப் பாதை ஒழுங்குகள் கடந்த ஆண்டுகள் போலவே இம்முறையும் செய்யப்பட்டுள்ளது.
இந்த உற்சவ காலத்திலே யாழ் மாநகர சபையின் உற்சவ கால பணிமனை 24 மணி நேரமும் செயற்பட இருக்கின்றது. இந்தப் பணிமனையின் ஊடாகவே சகல பணிகளையும் மாநகர சபையால் நாங்கள் முன்னெடுக்க இருக்கின்றோம்.
இந்த திருவிழா உற்சவ காலத்திலேயே ஆசாட சீடர்களாக கலாச்சார உடைகளை அணிந்து பக்தி பூர்வமாக ஆலயத்திற்கு சமூக மளிக்க வேண்டும் என்று அன்போடு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.
அத்தோடு தங்களது உடைமைகளை பாதுகாப்பதிலேயே தாங்கள் கூடிய கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆலய சூழலிலே கடைப்பிடிக்கப்படவேண்டிவை..

ஆலய சூழலிலே உரிய முறையில் பக்தர்கள் அடியார்கள் தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக ஆலய வெளிவீதியில் சிவப்பு வெள்ளை கொடிகள் கட்டப்பட்ட பகுதிகளில் அனைவரும் பாதணிகளை தவிர்த்து நடமாட வேண்டும் என்றும் அப்பகுதிகளில் வர்த்தக விளம்பர வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டு இருக்கின்றன என்பதனையும் தெரிவித்துக் கொண்டார்.
விசேட திருவிழா நாட்களில்

வழமை போன்று இம்முறையும் பாதுகாப்பு கடமைகளுக்காக கணிசமான அளவு காவல்துறையினர் கடமைகளில் ஈடுபடுத்த இருக்கின்றார்கள்.
ஆரம்ப உற்சவ காலங்களில் குறிப்பிட்ட அளவு காவல்துறையினர் கடமையில் ஈடுபடுகின்ற அதே நேரம் விசேட திருவிழா காலங்களில் சற்று அதிகளவிலான காவல்துறையினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றார்கள்.
அதேபோன்று இந்த விசேட திருவிழா நாட்களிலே குறிப்பாக சப்பரம், தீர்த்தம் போன்ற விசேட திருவிழா காலங்களில் நாம் விசேட சில ஒழுங்குகளையும் மேற்கொண்டு இருக்கின்றோம். குறிப்பாக தூக்கு காவடிகள் அனைத்தும் அது எந்த பகுதியில் இருந்து வந்தாலும் பருத்தத்துறை வீதியால் வந்து அந்த வீதியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ முருகன் தண்ணீர் பந்தல் இடத்தில் இறங்கி செட்டித்தெரு வீதியினூடாக வெளியேறுவதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கின்றன.
ட்ரோன் கமராக்கள் பயன்படுத்துவதற்கு முற்றாக தடை

இதேபோல இந்த உற்சவ காலத்திலேயே ஆலய வளாகத்தில் ட்ரோன் கமராக்கள் பயன்படுத்துவதை முற்றாக தடை செய்திருக்கிறோம் அதேபோலவே இந்த உற்சவ காலத்தில் ஆலய வளாகத்திற்கு ஆலய சூழலில் பொலித்தீன் பாவனையை முற்றாக தடை செய்திருக்கிறோம் அதேபோல சிறுவர்களைப் பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கண்காணிக்கிற செயல்பாடுகளை மேற்கொள்வோம்.
இதனை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
ஆலய சூழலில் வர்த்தக வியாபார நடவடிக்கைகளுக்குத் தடை

ஆலய சூழலில் வர்த்தக வியாபாரம் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஆலய பின்புற சூழலில் அந்த வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.
அதே நேரம் மாநகர சபை கடைகளை உரிய நடைமுறைகளை பின்பற்றியே தாங்கள் அதனை வழங்கி இருப்பதாகவும் தெரிவித்துக்கொண்டார். இந்த திருவிழா காலத்திலேயே பெருந்தொகையான பக்தர்கள் குறிப்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து பெருந்தொகையான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகையால் அவர்களுக்குரிய அடிப்படை வசதிகளை உரிய முறையில் மேற்கொள்வதற்கு மாநகர சபையின் பிரிவுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
வாகன பாதுகாப்பு

சென்ற வருடம் போல வாகன பாதுகாப்பு நிலையங்களுக்கு உத்தியோபூர்வமாக அனைவருக்கும் ஒரே கட்டணங்களை தான் இந்த முறையும் ஏற்பாடு செய்ய இருக்கின்றோம்.
அதனையும் மீறி மேலதிகமான கட்டணங்கள் அறவிடுவதாக எமக்கு முறைப்பாடு கிடைத்தால் அதற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை நாம் எடுப்போம் என்றார்.
அதேபோன்று கடந்த வருடங்கள் போன்ற இம்முறையும் ஆலய சூழலில் நடக்கின்ற விடயங்களை கண்காணிப்பதற்காக நாம் 50 வரையிலான கண்காணிப்பு கேமராக்களை பொருத்த இருக்கின்றோம்.
அந்த கமராக்களின் மையமாக நமது மாநகர சபையின் உற்சவ கால பணிமனை இயங்க இருக்கின்றது யாழ் மண்ணில் இருந்தும் வேறு மாவட்டங்களிலிருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் பெருமளவிலான பக்தர்கள் இம்முறை திருவிழாவிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
எனவே அவர்கள் தங்களது உடைமைகள் குறிப்பாக நகைகள் போன்றவற்றில் கூடிய அளவு கவனங்களை செலுத்துவது பொருத்தமாக இருக்கும் என்பதையும் இந்த இடங்களில் கூறிக்கொள்கிறோம் என மேலும் அவர் தெரிவித்தார்.