மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்களின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதுடன், மறுகுடியமர்வு மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்திக்காக நிலங்களை விடுவிக்கும் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இலங்கையில் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பணிகள் 2002ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) ஊடாக ஆரம்பிக்கப்பட்டன.
பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து இலங்கை இராணுவத்தின் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பிரிவும் இப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அமைச்சரவை அனுமதி
2026 ஜனவரி 1ஆம் திகதி நிலவரப்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேலும் 21.3 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது Mines Advisory Group (MAG), The HALO Trust, Delvon Assistance for Social Harmony (DASH) மற்றும் Skavita Humanitarian Assistance and Relief Project (SHARP) ஆகிய நான்கு நிறுவனங்கள் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், 2026 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலப்பகுதியில் குறித்த நான்கு நிறுவனங்களுடனும் தலா ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற அடிப்படையில் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாப்பாக விடுவித்து, மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதார நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு அபிவிருத்திக்கு தேவையான நிலங்களை மீண்டும் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |