கட்டுநாயக்காவில் ஜேர்மன் விமானத்திற்கு ஏற்பட்ட நிலை - ஆரம்பமானது விசாரணை
ஜேர்மனியில் இருந்து மாலைதீவுக்கு பறப்பை மேற்கொண்ட விமானம் மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியநிலையில் விமானநிலைய அதிகாரிகளின் அக்கறையின்மை குறித்து அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
226 பயணிகளுடன் ஜேர்மனியிலிருந்து மாலைதீவிற்கு பயணித்துக்கொண்டிருந்த குறித்த விமானம் சீரற்ற வானிலை காரணமாக செப்ரெம்பர் 26 அன்று காலை 11.25 மணியளவில் கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் பிற்பகல் 1 மணியளவில் மீண்டும் புறப்படத் தயாராக இருந்தது எனினும் விமானம் மீண்டும் பயணத்தை ஆரம்பிக்க முயன்றவேளை விமானநிலையத்தில் கிரெடிட் கார்ட் இயந்திரங்கள் செயல் இழந்ததால் அதுதாமதமாகியுள்ளது, இதன் காரணமாக விமானத்தை தரையிறக்கியமைக்கான கட்டணத்தை செலுத்தமுடியாமல் ஜேர்மனி விமானத்தின் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும் அதிகாரிகளின் தாமதங்கள் காரணமாக விமானம் தரித்து நிற்கவேண்டிய நிலையேற்பட்டபோதிலும் – கட்டணத்தை தாமதமாக செலுத்தியதற்கான அபராதம் என தெரிவித்து 48 டொலர்களை இலங்கை விமான நிலைய அதிகாரிகள் வசூலித்துள்ளனர்.
இந்த தகவலைத் தொடர்ந்து, விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். விமான நிறுவனத்திற்கும் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் செயல்பாட்டு பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர கூறினார்.
இதேவேளை பொறுப்பு வாய்ந்த இராஜாங்கஅமைச்சர் டி.வி.சானகவும் இந்த சம்பவம் குறித்து ஒரு சிறப்பு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட அறிக்கை நாளை தன்னால் பெறப்படும் என்றும் அதன் பிறகு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.