இரட்டை சகோதரிகளான சிறுமிகள் மாயம் -தீவிர தேடுதலில் காவல்துறை
கதிர்காமத்திற்கு செல்வதற்கு தாய் அனுமதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் இரட்டை சகோதரிகளான சிறுமிகள் இருவர் காணாமற்போயுள்ளதாக தாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
முந்தலம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து (25) 15 வயதான குறித்த இரட்டை சகோதரிகளையும் காணவில்லையென தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக முந்தலம காவல்துறையினர் தெரிவித்தனர்.
கதிர்காமம் செல்ல அனுமதி மறுப்பு

இந்த சிறுமிகளின் தோழி ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் கதிர்காமத்திற்கு புனித யாத்திரை செல்லவிருந்ததாகவும், அவர்களுடன் செல்ல அந்த இரட்டையர்கள் தாயாரிடம் அனுமதி கோரிய நிலையில் அவர் மறுத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கதிர்காமம் செல்வதற்காக சிறுமிகள் இருவரும் தாயிடம் 500 ரூபாய் கேட்டதாகவும், தாய் அதைக் கொடுக்கவில்லையெனவும் தெரியவருகிறது.
எவ்வித தகவலும் இல்லை

அதன் பின்னர் குறித்த சிறுமிகள் இருவரும் காணாமல் போயுள்ளதாகவும், நேற்று (26) வரை அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சிறுமிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.