மக்களின் கழுத்தை நெரித்து மனிதாபிமானமற்ற செயலை வெளிப்படுத்திய அரசு - சஜித் சாடல்
மக்களின் கழுத்தை நெரித்து தனது மனிதாபிமானமற்ற தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், உலக சந்தையில் எரிபொருளின் விலை பாரியளவில் குறைவடைந்த 2020ஆம் ஆண்டில் அதன் அனுகூலம் மக்களுக்குக் கிடைத்திருக்கும்.
உலகின் மிகவும் அபாயகரமான தொற்றை நாடு எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில், எரிபொருளின் விலையை அதிகரிக்காமல் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் செயற்பட்டிருக்க வேண்டும்.
எரிபொருளின் விலை அதிகளவில் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, நாட்டில் அனைத்துத் துறைகளிலும் விலையேற்றம் இடம்பெறுவதைத் தடுக்க முடியாது.
இந்த பாரிய தொற்று நிலைமைக்கு மத்தியில் மக்களின் கழுத்தை நெரிப்பதன் மூலம், அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற தன்மை வௌிப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.