நாட்டை முடக்குவதாலும் இனவாதத்தை தூண்டுவதாலும் மக்கள் புரட்சிக்கு முடிச்சுப் போட முடியாது: எம்.எம் .நசுருதீன்
நாட்டை முடக்குவதாலும் இனவாதத்தை தூண்டுவதாலும் மக்கள் புரட்சிக்கு முடிச்சுப் போட முடியாது என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம் .நசுருதீன் தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக கோரி காலிமுகத்திடலில் அரச தலைவர் செயலகத்திற்கு முன்னால் 11ஆவது நாளாக தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை, நாட்டை முடக்கி இனவாதக் கருத்துக்களைத் தூண்டி மக்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தி மழுங்கடிக்கச் செய்வதில் அரசாங்கம் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றது என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.நசுருதீன் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று (19) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் மிரிகானை வீட்டிற்கு முன்பாக மக்கள் எழுச்சி நடைபெற்றபோது அராபிய வசந்தம் என்ற சொற்பிரயோகம் பாவிக்கப்பட்டதால் இது முஸ்லிம் அடிப்படைவாதிகளின் செயல் என அரச தலைவர் செயலக ஊடக அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.
அதே போன்று காலி முகத்திடலில் நடைபெற்று வருகின்ற மக்கள் எழுச்சி போராட்டத்தின்போது கலந்துகொண்ட முஸ்லிம் மக்கள் நோன்பு திறப்பதையும் தொழுகையில் ஈடுபடுவதையும் அவதானித்த ஞானசார தேரர் இங்கே வகாபிசம் [ jamaat-e-islami ] போன்ற தீவிரவாத அமைப்புகள் களம் இறங்கியிருக்கிறார்கள் என்று இனவாத கருத்துக்களை தெரிவித்தார்.
ஆனால் மக்கள் கோட்டா கோ கோம் என்ற மகுடவாசகத்தின் கீழ் இன, மத ,மொழி வேறுபாடுகளுக்கப்பால் இலங்கையர் என்ற ஒரே நாமத்தின் கீழ் மிகப்பலமாக கைகோர்த்து போராடி வருகின்றனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின் வெட்டு ,எரிபொருள் ,எரிவாயு அத்தியவசியப் பொருட்கள் அனைத்துக்குமான விலையேற்றமும் தட்டுப்பாடும் அனைத்து மக்களையும் வீதிக்கு இறக்கி அரசாங்கத்திற்கு எதிராக போராட வைத்துள்ளது.
ராஜபக்சவின் ஊழல் மோசடியை அறிந்த மக்கள் இன்று ராஜபக்சக்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கோசம் எழுப்பி கொண்டிருக்கின்ற காட்சியை காண்கின்றோம்.
தற்போது நாட்டு மக்கள் பசி,பட்டினியினால் பொருட்களை பெற்றுக் கொள்வதில் வரிசையாக நின்று கஷ்டப்படுவதையும் அரசாங்கம் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பதிலாக வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறது.
இனவாத கருத்துக்களை பரப்புவது வேடிக்கையாக இருக்கிறது. இந்த நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் இனிமேல் ஒருபோதும் இனவாத கருத்துக்களுக்கு அடிபணிந்து ஏமாந்து போக தயாரில்லை கோட்டா கோ கோம் என்ற குடையின் கீழ் பெளத்தம் ,இஸ்லாம் இந்து கிறிஸ்தவம் என்ற இன மத மொழிகளுக்கு அப்பால் இலங்கையர் என்ற உணர்வோடு ஊழல் மோசடிக்கு எதிராக நாட்டின் எதிர்கால நலனுக்காக பலமாக கை கோர்த்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.