யாழ் அம்மன் சிலை வழக்கு - எழுத்துமூல சமர்ப்பணங்களிற்காக ஒத்திவைப்பு..!
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, இந்து அமைப்புக்கள் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் ஆதினம் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகளும் முன்னிலையாகினர்.
குறித்த வழக்கு தொடர்பில் காவல்துறையினரின் வழக்கிடு தகைமை மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் கேள்விக்குட்படுத்தி இருவரும் நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர். எழுத்துமூல சமர்ப்பணங்களிற்காக வழக்கு எதிர்வரும் 04.05.2023 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
யாழ் தீவக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மன் சிலையினை அகற்ற அனுமதிகோரி யாழ்ப்பாண காவல்துறையினரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் 30ற்கும் மேற்பட்ட இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ளனர்.
இந்நிலையில் இந்து அமைப்புகள் சார்பில் சட்டத்தரணி சுமந்திரன், ஸ்ரீகாந்தா, திருக்குமரன் உட்பட மேலும் பல சட்டத்தரணிகளும் இந்து அமைப்புகள் சார்பில் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ளனர்.
இந்நிலையில் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


