வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : ஜனாதிபதி உறுதி
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் சரியான முறையில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு (Sri Lanka) விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் இன்று (30.04.2025) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
GSP+ சலுகை
ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ சலுகை இலங்கையின் ஏற்றுமதித் துறைக்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதுடன், பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கம் செலுத்தியிருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கை பொருளாதார ரீதியில் சரிவடைவதற்குக் கடந்த ஆட்சியாளர்களின் அரசியல் முறையும், வீண்விரயமும், மோசடியுமே காரணமாக அமைந்திருந்தது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி,
இப்போது நாடு மீண்டும் சரியான நிர்வாகத்தைக் கொண்டதாக மாற்றப்பட்டு வருவதாகவும், அதற்குச் சிறிது காலம் அவகாசம் அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.
வடக்கின் தமிழ் மக்கள்
தற்போதைய அரசாங்கத்தின் மீது ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.இலங்கையில் கடந்த அரசாங்கங்கள் தெற்கு சிங்கள வாக்குகளை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டன.

ஆனால் இம்முறை வடக்கின் தமிழ் மக்கள், கிழக்கு முஸ்லிம் மக்கள் மற்றும் தெற்குச் சிங்கள மக்களும் தற்போதைய அரசாங்கத்தை உருவாக்க ஆதரவளித்தனர் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் சரியான முறையில் நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்