ஆளும் தரப்பின் அலட்சிய போக்கால் இரண்டு கிழமைக்கு மேல் வீதியில் நீர் கசிவு
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான பல்லப்பை - பருத்தித்துறை பிரதான வீதியில் கடந்த 14 நாட்களுக்கும் மேலாக நீர் கசிந்த வண்ணம் உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் வழங்கும் குழாய் ஒன்றில் வெடிப்பு ஏற்றப்பட்டதை நவீன இயந்திரங்கள் மூலம் அறிந்த குறித்த திணைக்களம் எந்த இடத்தில் நீர் கசிவு ஏற்படுகிறது என்பதை அறிய முடியாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
குற்றச்சாட்டு
ஆனாலும் கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை முழுவதும் ஏற்பட்ட அனர்த்த காலத்தின் பின்னர் குறித்த இடத்திலிருந்து நீர் கசிவதை அவதானித்த மக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அந்த இடத்தினை வந்து பார்வையிட்ட நீர்ப்பாசன திணைக்களம் இரண்டு கிழமைகள் கடந்தும் இது வரை குறித்த சம்பவம் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் குறித்த பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிரதேச சபையின் வட்டார உறுப்பினர் உள்ளதாகவும் அவரும் இச்சம்பவம் தொடர்பாக மௌனம் சாதிப்பதாகவும் மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த இடத்தில் பாரியளவு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதோடு தற்போது நுளம்பு குடம்பிகள் அதிகம் காணப்படுகிறது. அதனால் நுளம்புகளால் ஏற்படும் நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன எனவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |