ஈழத் தமிழர்களின் மாறாத வடுக்கள் "ஆறாம் நிலமாக" வேல்முருகன் தெரிவிப்பு
உலகத் தமிழர்களின் உறவுப் பாலமான ஐபிசி தமிழ், ஈழத்தமிழர்களின் மாறாத வடுக்களையும் போருக்கு பின்னரும் மாறாத அவர்கள் வாழ்வியலையும் "ஆறாம் நிலம்" எனும் திரைப்படமாக வெளியிட்டிருப்பதாக, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
நேற்று வெளியிடப்பட்ட இத்திரைப்படம் பல்லாயிரக்கணக்கானவர்களிடமிருந்து பெருவரவேற்பை பெற்றுள்ள நிலையில், வேல்முருகனும் தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
போருக்குப் பின்னரான ஈழத்தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும் துயரங்களையும் வெளிப்படுத்தும் முகமாக உருவாக்கப்பட்டுள்ள ஆறாம்நிலம் திரைப்படத்துக்குரிய பின்னூட்டங்களும் சாதகமான முறையில் பதிவிடப்பட்டு வருகின்றன.
போர்க்காலத்தில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட நிலம், காணாமல் போனோரைத் தேடும் போராட்டம், முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை ஆகியவற்றைச் சுற்றி கதை நகர்கிறது.
ஈழம் சார்ந்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களிலோ அல்லது ஈழத்தில் எடுக்கப்பட்ட படங்களிலோ இதுவரை சொல்லப் படாத ஒரு கதைக் களம் இதில் பேசப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், ஈழ நிலத்தின் வலியை மொழியெடுத்து திரையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இத்திரைக்காவியம் பெரும் வெற்றியடைய வேண்டுமெனவும், உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் இத்திரைப்படத்தைக் கொண்டாட வேண்டுமெனவும் தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஆறாம் நிலம், ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் இன்றைய அவலங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.