இந்தியாவிற்கு நன்றி தெரிவித்தது இலங்கை
கொழும்பு கடற்பகுதியில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதற்கு இந்திய கடலோர பாதுகாப்பு படை வழங்கிய ஒத்துழைப்புக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவிற்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு இடையில் ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே ஸ்ரீலங்கா பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன நன்றி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவும் இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடர்பாக இந்திய தூதுக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஸ்ரீலங்கா பாதுகாப்புச் செயலாளர் இந்த நன்றியை தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின் போது தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இரு நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் இராணுவ பயிற்சி பரிமாற்றத்தின் சீரான செயல்பாடு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக இந்த கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டுள்ளது. இந்த சந்திப்பினை நினைவு கூரும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
கொவிட்-19 பரவல் தடுப்பு தொடர்பான சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம் பெற்ற இந்தக் கலந்துரையாடலில், ஸ்ரீலங்காவின் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, தேசிய புலனாய்வு பிரதானி மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார, மேலதிக செயலாளர் பி பி எஸ் சி நோனிஸ், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் விகாஷ் சூத் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.