PTA இயிற்கு எதிராகப் போராடிய அனுரவே இன்று தமிழரை ஒடுக்க அதைப் பிரயோகிக்கிறார் !
இலங்கையில் ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்ப்பதும் பிறகு அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பிரயோகிப்பதும் அண்மைய காலத்தில் தொடர்கின்ற அரசியல் அவலம்.
மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க வழியில் தற்போது அனுர அரசும் அதனைத் தொடர்கின்றது. 1979 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் நாளன்று சிறிங்கா நாடாளுமன்றத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இச் சட்டம் உருவாக்கப்பட்டு 46 ஆண்டுகள் கடந்து விட்டன. இலங்கை அரசு உருவாக்கி வைத்திருக்கும் பயங்கரவாத சட்டம் உலகின் கொடூரமான சட்டமாக கருதப்படுகிறது. பொதுவாக சட்டங்கள் மக்களையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கவே உருவாக்கப்படுகின்றது. ஆனால் இனமொன்றையே நசுக்குவதற்காக உருவாக்கப்பட்டதே பயங்கரவாத தடைச்சட்டம்.
🛑 46 ஆண்டுகளுக்கு முன்
ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் பெரும் எழுச்சி கொண்டிராத காலப் பகுதியாக எழுபதுகளின் இறுதியை கருதலாம். தனிச்சிங்கள சட்டம் அதனை தொடர்ந்து முன்னெடுத்த இனப்படுகொலைகளும் தனி ஈழமே தீர்வு என்ற நிலைக்கு தமிழர்களை தள்ளிய காலத்தில் குறிப்பாக தமிழ் இளைஞர்களை கபளீகரம் செய்கிற நோக்கில் சிங்கள அரசால் பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது.
1979ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் நாள் சிறிங்கா நாடாளுமன்றத்தில் 48ஆவது இலக்க பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு தற்காலிக ஏற்பாடாகத்தான் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அதுவே இன்றைக்கு 46 ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அழித்து வருகிறது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதிப்பதாகவும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த காலத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் ஆராய்ந்த ஐ.நாவின் விசேட நிபுணர் பென் எமர்சன் தெரிவித்துள்ளார்.
எமர்சன் வருகை தந்த காலத்தில் நடைமுறையில் இருந்த ரணில் – மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டம் மிகவும் கொடுமையானது என்பதை பகிரங்கமாக ஏற்றிருந்தது.
🛑 பயங்கரவாத சட்டம் என்பது
பயங்கரவாதத் சட்டம் என்றால் என்ன? இது உதிரத்தை உறைய வைக்கும் மனதை நடுங்கச் செய்யும் விரிவாக இருக்கலாம். பயங்கரவாத விசாரணைப் பிரிவு, காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சிற்கு கைது செய்தல், விசாரணை செய்தல், ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளல் என்பவை தொடர்பில் பரந்தளவிலான அதிகாரத்தை பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்ட விதிமுறை வழங்குகிறது. சந்தேகத்தின் அடிப்படையிலேனும் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்க முடியும்.
விசாரணைக்காக நபர் ஒருவரை வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டுச் செல்கின்ற நிலையில் நீதிமன்ற வழிநடத்தல் இன்றி சொத்துக்களை முடக்க முடியும்.
சந்தேக நபரை தடுத்து வைப்பதன் கால எல்லையை 18 மாதங்களாக நீடிக்க முடியும். எனினும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படும் ஒருவர் வழக்கு விசாரணை முடியும் வரை கால வரையரையின்றி தடுத்து வைக்கும் நிலையே நடைமுறையில் உள்ளது. கைதாகி சிறையில் உள்ளபோது பாரிய மற்றும் கீழ்த்தரமான சித்திரவதைகள் இடம்பெறுகின்றன.
நீதிமன்றங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற சம்பவங்கள் மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றன. நீதிமன்றங்களினாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்த அதிகாரமற்றும் அந்த நடவடிக்கைக்கு இணக்கம் செய்யும் நிலையுமே நடைமுறையில் உள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பொறுத்தவரையில் நீதிமன்றத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் ஒரு நிறுவனமாகவே கருகிறது. சிறுபான்மை தமிழ் இன மக்களுக்கான நீதி மறுத்து அவர்கள்மீதான மனித உரிமை மீறலை நியாயப்படுத்தியும் எதையும் செய்யும் அதிகாரத்தை இச் சட்டம் வழங்குகிறது.
🛑 தமிழீழத்திற்கு வித்திட்ட சட்டம்
தமிழ் மக்கள்மீது இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவே பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதற்கு முந்தைய காலங்களில் அரசின் மூலம் உத்தியோக பூர்வமற்ற முறையில் இனக் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டன.
பயங்கரவாதத் தடைச்சட்டம் இந்த தீவின் சிறுபான்மைத் தமிழ் இன மக்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அழிக்கும் உத்தியோகபூர்வ முறையை அல்லது அதிகாரத்தை அரச எந்திரம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கும் இனவாதிகளுக்கும் கையளித்தது.
ஒடுக்குமுறைக்கு உள்ளான ஈழத் தமிழ் மக்கள் தனி நாடு ஒன்றிலேயே சுதந்திரமாக வாழ இயலும் என்றும் அது தமிழீழம் என்ற நாட்டிலேயே சாத்தியமாகும் என்றும் முடிவுக்கு வர அடிப்படையாக இருந்த காரணங்களில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் ஒன்றாகும். பயங்கரவாத தடைச் சட்டம் காரணமாக ஈழத் தமிழ் மக்கள் கடந்த 43 வருடங்களாக பெரும் இன ஒடுக்குமுறைகளை சந்தித்து வருகின்றனர்.
தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் எவரும் எந்த நேரத்திலும் எந்தக் காரணத்தைக் கூறியேனும் கைது செய்யப்படலாம் என்றும் அவருக்கு என்ன நேர்ந்தாலும் அதனைக் குறித்து கேட்க இடமில்லை என்ற நிலையும் காணப்பட்டது.
இது தமிழ் மக்களின் அரசு அல்ல என்பதையும் இது தமிழ் மக்களை ஒடுக்கி அழிக்கும் அரசு என்பதையும் தமிழ் மக்கள் தமக்கான பாதுகாப்பை தமிழ் அரசு ஒன்றின் ஊடாகவே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற யதார்த்தத்தையும் இச்சட்டத்தின் நடைமுறைகள் ஈழத் தமிழ் இனத்திற்கு உணர்த்தி நின்றன.
🛑 எதிர்கட்சிகளின் அரசியல் முதலீடா
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடந்த கால இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தபோதிலும், இதுவரை அதற்கான உரிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கடந்த காலத்தில் கூறியதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
பயங்கரவாத சட்டம் உருவாக்கப்பட்டு 46 ஆண்டுகள் என்றால் “பயங்கரவாத சட்டத்தை நீக்கு!” என்று தமிழ் மக்கள் குரல் எழுப்பியும் 46 ஆண்டுகள் ஆகிவிட்டன. இச் சட்டத்தால் பல ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் பிள்ளைகளை, தாய், தந்தையரை இழந்துபோயுள்ளனர். கைதகளின் உறவுகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
சிறையில் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். எல்லாப் போராட்டங்களும் தீர்வின்றி முடக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதத் தடைச் சட்டமும் அதனை கொண்டு கைதுசெய்யப்பட்டவர்களும் கொஞ்சமும் மனித நேயமற்ற முறையில் தென்னிலங்கையில் ஆளும் எதிர்கட்சிகளின் அரசியல் முதலீடுகளாக ஆகியிருப்பதே இத் தீவின் பெரும் துயரமாகும். இதில் முக்கியமானது இன்றைய ஜனாதிபதி அனுர ஆட்சியைப் பிடிக்கவும் இந்த சட்டத்திற்கு எதிரான அவரது அரசியல் முதலீடாக இருந்துள்ளது.
கடந்த காலத்தில் இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காகூட இச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய மக்களை அழைத்துள்ள பதாகைகள் இன்றும் ஊடகப் பரப்பில் உலாவருகின்றன. அன்று பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராகப் போராடியவர் இன்று அச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களை ஒடுக்குகிறார் என்பதுதான் வேதனை. ஆனால் இதுதான் சிறிங்கா அதிபர்களின் முகம். பேரினவாத்தின் முகம்.
🛑 PTA-ஐ பயன்படுத்தும் அனுர அரசு
பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் இலங்கை அரசு பயன்படுத்துவதன் வழியாக இச் சட்டத்தை நீக்கப் போவதில்லை என்பதையா அரசு உணர்த்துகிறது. படைப்பாளிகள், செயற்பாட்டாளர்களை இச்சட்டம் கொண்டு ஒடுக்கும் அரசு அரசியல் பிரதிநிதிகளையும் அச்சட்டத்தின் கீழ் மௌனிக்கச் செய்யப் பார்க்கிறது.
அத்துடன் தொடர்ந்தும் அரசியல் கைதிகளின் விடுதலை ஈழத் தமிழ் மக்களால் வலியுறுத்தப்படுகின்றது. இன்று சிங்கள மக்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என வலியுறத்துகின்றனர். தமிழ் மக்களை தொடர்ந்தும் ஒடுக்கி ஆளும் ஒரு அரசு, அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழாமல் தடுத்து ஒடுக்க இந்தச் சட்டம் தேவை என்று கருதுவதன் காரணமாகவே இந்தச் சட்டத்தை எப்படியோ நடைமுறையில் வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறது.
அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு புதிய வடிவம் கொடுத்து அதனை தொடர்ந்தும் தீவிரப்படுத்த முனைவதே இங்கு ஈழத் தமிழ் இனம் சந்திக்கப் போகும் ஆபத்தாகும். அத்துடன் சர்வதேசத்தின் நன்கொடைகளைப் பெறவும் பொருளதார நெருக்கடிகளில் இருந்து விடுபடவும் ஈழத் தமிழர்களின் தனிநாட்டு உரிமைப் போராட்டத்தை ஒடுக்கும் சட்டத்தையே இலங்கை அரசு பயங்கரவாதத் தடைச்சட்டம் என்று அழைக்கிறது.
தமிழ் மக்களின் சுய உரிமையை அவர்களிடமே கையளித்தல், அவர்களின் தாயகப் பிரதேசத்தில் அவர்களே ஆட்சி புரிதல், அவர்களின் தாயகத்தை அபகரிக்காது விடுதல், அவர்கள் மீதான இன ஒடுக்குமுறை மற்றும் இன அழிப்புச் செயல்களை நிறுத்திக் கொள்ளல் என்பனவற்றை மேற்கொள்ளாமல் எந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் தமிழர்களின் இன உரிமைப் போராட்டத்தின் பயணத்தை தடுக்க இயலாது. மாறாக ஈழ விடுதலைப் போராட்டத்தை அது நியாயப்படுத்தவே செய்யும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 17 July, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
