ராஜபக்சகளின் ஆட்சியில் வட கிழக்கில் எமக்கு முழுச் சுதந்திரம் - புலம்பும் அம்பிட்டிய சுமணரத்ன தேரர்
ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் வடக்கு – கிழக்கில் முழுச் சுதந்திரத்துடன் செயற்பட்டோம் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசின் ஆட்சியில் அவ்வாறு செயல்பட முடியாதுள்ளது என்றும் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அடிபணிய வேண்டிய நிலை
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், எப்படியான சவால்கள் வந்தாலும் எமது நாட்டின் வீரம் மிகுந்த தலைவர்கள் தொடர்பிலும், சிரேஷ்ட தலைவர்கள் தொடர்பிலும் நாங்கள் கதைப்போம்.
ஏனெனில் பௌத்த சாசனத்தை அவர்கள் பாதுகாத்துள்ளனர். மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்திலும், கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலும் எமக்கு எவரிடமும் அடிபணிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கவில்லை.
வடக்கு, கிழக்கில் முதுகெலும்புடன் செயற்பட்டு பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தோம். அதேபோல், தொல்லியல் இடங்களைப் பாதுகாப்பதற்குரிய வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தோம்.
அரசு எமக்கு வழங்க வேண்டும்
ஆனால் தற்போது அவற்றின் மீதான பிடிமானங்களை இழந்துள்ளோம். இது தொடர்பாகக் கதைக்கும் போது எம்மை அரச எதிர்ப்பாளர் என்று கூறுகின்றனர்.
சில கட்சிகளுக்குச் சார்பாகச் செயற்படுகின்றோம் என்றும் விமர்சிக்கின்றனர். அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்கான உரிமையை அரசு எமக்கு வழங்க வேண்டும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
