தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சிபெற்ற திலீபனின் நினைவேந்தல்
தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வானது இன்று தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டு வருகின்றது.
தாயக பகுதி எங்கும் திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தியானது மக்களின் அஞ்சலி வணக்கத்துடன் யாழ் நல்லூரை வந்தடைந்து வணக்க நிகழ்வுகள் நிறைவுற்றிருக்கிறது.
அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம்
இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியக் கிளையின் ஒழுங்கமைப்பில் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் இணைந்து திலீபனுக்கான நினைவேந்தல் அகம் அமைக்கப்பட்டு வெள்ளை - கறுப்பு சீருடை அணிந்த மனித நேயப் பணியாளர்களின் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
தியாக தீபம் திலீபனுக்கான ஈகைச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அக வணக்கத்துடன் மலர் வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்வு பி.ப 5 மணி வரை (பிரித்தானிய நேரம்) நடைபெற இருப்பதுடன், நினைவு வணக்க உரைகள்.பி.ப 4 மணிக்கு ஆரம்பமாகி உறுதி ஏற்புடன் நிறைவடைய இருக்கின்றது.
நினைவு வணக்க நிகழ்வு
இதேவேளை, பிரித்தானியாவின் ஒக்ஸ்போட்டில் தியாக தீபத்தின் நினைவாகவும், தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் உட்பட புரட்டாதி மாதங்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவேந்தியும் வணக்க நிகழ்வு தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றது.