ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை?
கொரோனா தாக்கம் மற்றும் பொருளாதார பிரச்சினைக்கு முகம்கொடுக்கவேண்டிய முறை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டிருந்த பிரேரணைகளை செயற்படுத்தி இருந்தால், “அர்ப்பணிக்க தயாராகுங்கள்” என நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவேண்டிய அவல நிலை ஒருபோதும் ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருக்காது என ஐக்கிய தேசிய கட்சி பிரதி தலைவர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடரபில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
நாடு எதிர்கொண்டுள்ள தொற்று நிலைமையில் கொரோனா தொற்று மற்றும் பொருளாதார பிரச்சினைக்கு முகம்கொடுக்கவேண்டிய முறை தொடர்பில் தெளிவுபடுத்தி ஐக்கிய தேசிய கட்சி 21 அம்சங்கள் அடங்கிய பிரேரணை ஒன்றை அரசாங்கத்துக்கு கையளித்திருந்தது.
இதில் சுகாதாரம் மற்றும் பொருளாதார ரீதியில் பாதுகாப்பான நாடடொன்றை கட்டியெழுப்புவதற்கு தேவையான பிரேரணைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போது ஜனாதிபதிக்கும் இதனை கையளித்திருந்தார்.
ஏனைய கட்சிகள் போல் அல்லாமல் நாங்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதுடன் எமது மாற்று வழிகளையும் தெரிவிக்கின்றோம்.
மேலும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 200 வரை நெருங்கி இருக்கின்றது. நாட்டை மூன்று வாரங்களுக்காவது முடக்கவேண்டும் என்றே நாங்கள் தொடர்ந்து அரசாங்கத்துக்கு தெரிவித்து வந்தோம்.
இருந்தாலும் அரசாங்கம் தாமதித்தாவது 10 நாட்களுக்கு நாட்டை முடக்குவதற்கு தீர்மானித்திருக்கின்றது. என்றாலும் வீதிக்கு சென்று பார்த்தால் பொது மக்கள் வீதிகளில் இருக்கின்றனர்.
நாடு முடக்கப்பட்டிருப்பது போல் தெரியவில்லை. இவ்வாறான முடக்கத்தை நாங்கள் கோரவில்லை. சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கும் முறையிலான முடக்கமே தேவையாகின்றது.
அத்துடன் கடந்த வாரம் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் சுருக்கம் என்ன வென்றால், கொரோனா காரணமாக நாட்டை தொடர்ந்து முடக்கவேண்டிய நிலை ஏற்பட்டால் அர்ப்பணிப்பதற்கு மக்கள் தயாராகுமாறு மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்.
அதாவது, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிக்கவேண்டி ஏற்படும். சம்பளம் வழங்க முடியாமல் போகும்.
அதனால் அரச ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை தியாகம் செய்யவேண்டும் என்ற விடயத்தையே ஜனாதிபதி மறைமுகமாக தெரிவித்திருக்கின்றார்.
எமது அரசாங்க காலத்தில் அரச ஊழியர்களுக்கு அதிகரித்த 10 ஆயிரம் ரூபாவை இல்லாமலாக்குவதற்கே இந்த திட்டமாகும்.
அத்துடன் எமது பிரேரணையில் பொருளாதார பிரச்சின்னைக்கு முகம்கொடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லவேண்டும் என தெரிவித்திருக்கின்றோம்.
சர்வதேச நாணய நிதியத்துக்கு சென்றால், எங்களுக்கு வேறு நாடுகளில் இருந்து நிவாரணங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். அந்த இடத்துக்கு செல்லாமல் மக்களுக்கு அர்ப்பணிக்குமாறு தெரிவிக்கவேண்டாம்.
தங்களது உற்ற நண்பர்களுக்கு கொரோனா தொற்றின் மூலம் பணம் கொள்ளையிட இடமளிக்கவேண்டாம். எனவே சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் பாதுகாக்கப்பட்ட நாடொன்றாக எமது நாட்டை கட்டியெழுப்ப தேவையான பிரேரணைகளை நாங்கள் அரசாங்கத்துக்கு கையளித்திருக்கின்றோம்.
அந்த பிரேரணைகளை ஏற்றுக்கொண்டிருந்தால், அர்ப்பணிக்க தயாராகவேண்டும் என மக்களுக்கு தெரிவிக்கவேண்டிய நிலை ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.