தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் படலம் சிறிலங்காவில் ஆரம்பம்
சிறிலங்காவில் தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்தும் படலத்தை அரசாங்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் சர்வதேச ஊடகமொன்றின் கிழக்கு மாகாண ஊடகவியலாளராக செயற்படுகின்ற தமிழ் ஊடகவியலாளர் மற்றும் வவுனியாவிலுள்ள தமிழ் ஊடகவியலாளர் ஆகியோர் பயங்கரவாத விசாரணைப் பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
BBC தமிழ் ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளரும், சுயாதீன ஊடகவியலாளருமான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த U.L.மப்றுக், பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு எதிர்வரும் 8ஆம் திகதி வருகை தருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ் மொழியில் எழுதப்பட்ட அழைப்புக் குறிப்பினை அம்பாறை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகம் தனக்கு வழங்கியிருப்பதாக U.L.மப்றுக் தெரிவித்தார்.

அதேவேளை, வவுனியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 26ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரனைபிரிவின் வவுனியா அலுவலகத்திற்கு விசாரணைக்காக சமூகமளிக்குமாறு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியாவை தளமாக கொண்டு இயங்கிவரும் வறுமைக்குட்பட்ட மக்களுக்காக உதவும் சமூக ஆர்வலர் அமைப்பு ஒன்று தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.