ரணிலுக்கு கொலை மிரட்டல் விடுத்த 19 வயது இளைஞன்
சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
எப்பாவல, மெதியாவ பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகநூல் கணக்கு ஒன்றின் மூலம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் குற்ற விசாரணை பிரிவினர் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
முகநூலில் பதிவு
எதிர்வரும் 7ஆம் திகதி அதிபர் ரணில் விக்ரமசிங்க தம்புத்தேகம மற்றும் எப்பாவல ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த நிலையில், “நாட்டை சீரழித்த நபர் எமது பகுதிக்கு வருகின்றார். ஸ்னைப்பர் துப்பாக்கி ஒன்றை பெற்றுக் கொள்ள முடியுமா?” என முகநூலில் குறித்த இளைஞர் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவினை தொடர்ந்து குற்ற விசாரணை பிரிவினர் விரைந்து செயல்பட்டு குறித்த இளைஞரை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
