வவுனியாவில் இளைஞன் கடத்தல் : யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் அதிரடியாக கைது
யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்து வவுனியா இளைஞன் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினர் இன்று (01.07) தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம்(jaffna), மானிப்பாய்(manipay) பகுதியைச் சேர்ந்த மூவர் கார் ஒன்றில் கடந்த வெள்ளிக் கிழமை வவுனியாவிற்கு(vavuniya) வருகை தந்து வவுனியா, புதிய பேருந்து நிலையம் முன்பாக நின்ற வவுனியா இளைஞன் (வயது 18) ஒருவரை காரில் கடத்திச் சென்று குடியிருப்பு குளக்கட்டு பகுதியில் வைத்து குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பின்னர் அவரது வங்கி அட்டையை பறித்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் பெற்று விட்டு தாக்குதலுக்குள்ளான இளஞனை புதிய பேருந்து நிலையம் முன்பாக இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
முறைப்பாட்டை அடுத்து துரித கதியில் செயற்பட்ட காவல்துறை
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரியின் வழி நடத்தலில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இவ் விசாரணைகளையடுத்து யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 19, 21 மற்றும் 19 வயது இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
