நாட்டில் காற்றின் தரம் குறித்து வெளியான தகவல்
புதிய இணைப்பு
கொழும்பு (Colombo), வவுனியா, கண்டி, கேகாலை, நுவரெலியா, களுத்துறை, அம்பாந்தோட்டை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் நல்ல நிலையில் காற்றின் தரம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், காற்றின் தரம் இன்று வெள்ளிக்கிழமை (28) 32 தொடக்கம் 80க்கு இடையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயங்கள் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரம் மிதமான நிலை
அந்த அறிக்கையில், நாட்டில் வியாழக்கிழமை (27) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையிலும், கொழும்பு 07, கண்டி, கேகாலை, நுவரெலியா, களுத்துறை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் நல்ல நிலையிலும் காணப்பட்டது.
அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1.00 மணி முதல் 2.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஏனைய பகுதிகளில், மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (28) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
100 மில்லிமீற்றர் மழை
ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (30-40) வேகத்தில் காற்று வீசக்கூடும்.
தற்காலிக பலத்த காற்று
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது, தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 2 நாட்கள் முன்
