தென்னிலங்கையைச் சேர்ந்த நபரால் நல்லூர் ஆலய வளாகத்தில் பரபரப்பு
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினுடைய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆலய சுற்று வீதியில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு சிவப்பு வெள்ளை வேலிகளுக்குள் எவ்வித வாகனங்களும் அனுமதிக்காதவாறு பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் இன்று(5) மதியம் காவல்துறை உயர் அதிகாரியின் சகோதரர் எனக் கூறிக் கொண்ட தென்னிலங்கையைச் சேர்ந்த நபர் சிவப்பு வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்ட தடுப்பு வேலிகளையும் தாண்டி ஆலய முன்றலில் பக்தர்கள் பிரதிஸ்ட்டை அடிக்கும் மணல்மேல் தனது காரை நிறுத்தியுள்ளார்.
ஆலய சூழலில் கடமையில் இருந்த யாழ். மாநகர சபையினுடைய பணியாளர்கள் குறித்த காரினை அகற்ற முற்பட்டபோதும் அங்கு கடமையில் இருந்த காவல்துறையினர் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மாநகரசபை பணியாளர்களையும் மீறி குறித்த காரினை நிறுத்த அனுமதித்துள்ளனர்.
பாதணியுடன் நடமாடியதாக
மேலும் குறித்த நபர் சிவப்பு வெள்ளைக் கொடி கட்டப்பட்ட ஆலய வளாகத்தில் பாதணியுடன் நடமாடியதாக நேரில் கண்ட பக்தர்கள் தெரிவித்தனர்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ். மாநகரசபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் குறித்த வாகனத்தை ஆலய வளாகத்தில் நிறுத்த அனுமதித்த காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இவ்விடத்தில் வாகனத்தை நிறுத்த எதற்காக அனுமதித்தீர்கள் என வினாவியபோது “அவர் காவல்துறை உயர் அதிகாரியின் சகோதரர் அவரை எப்படி நாம் மறிப்பது” என அங்கு கடமையில் நின்ற காவல்துறையினர் தெரிவித்தனர்.
பின்னர் அங்கிருந்த காவல்துறையினர் சென்று குறித்த நபரை அழைத்துவந்தார். அதனைத் தொடர்ந்து குறித்த நபர் உடனடியாக தமது வாகனத்தை அப்புறப்படுத்தினார்.
பக்தர்கள் பிரதிஸ்ட்டை அடிக்கக்கூடிய மணல்மேல் காரை நிறுத்தியமையை ஏற்கமுடியாது என ஆலயச் சூழலில் நின்ற பக்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
