வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் இறுதி நாளான இன்று நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் (Ministry of Finance, Planning and Economic Development) செலவின தலைப்புகள் விவாதிக்கப்பட உள்ளன.
இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள குழுநிலை விவாதம் மாலை 6 மணிக்கு நிறைவடைந்ததன் பின்னர் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
நிதி அமைச்சு
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 102, 237 முதல் 252, 280, 296, 323, 324, 329, 333 மற்றும் 338 ஆகிய தலைப்புக்களின் கீழ் குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது.
2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது 'வரவு செலவுத் திட்ட உரை' நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடந்த 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெப்ரவரி 18ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை, 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) மீதான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.
வரவு செலவுத் திட்டம்
அதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் பெப்ரவரி 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதற்கமைய குழு நிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 19 நாட்கள் இடம்பெற்றிருந்த நிலையில், 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்