கொட்டித் தீர்க்கப்போகும் மழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (26.05.2025) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பலத்த காற்று
நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது சிறியளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இன்று நண்பகல் முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை கன மழை பெய்ய கூடிய வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா (Nagamuthu Piratheeparajah) தெரிவித்துள்ளார்.
இந்த மழை மேற்காவுகைச் செயற்பாட்டினால் உருவாகும் மழை என்பதனால் இடி மின்னலோடு இணைந்ததாகவே இந்த மழை கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை எதிர்வரும் 27.05.2025 அன்று வங்காள விரிகுடாவில் பங்களாதேஷிற்கு தெற்காக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் எத்தகைய பாதிப்பும் கிடையாது. ஆனாலும் இந்த நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


யார் அகதி..! : உலகத்தமிழர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய தீர்ப்பு 11 மணி நேரம் முன்
