இலங்கைக்கு உதவி செய்த மூன்று பெண்கள் - நன்றி கூறிய அதிபர்
இலங்கையில் பெண்கள் முன்னிலையில் இருப்பதாகவும், அந்த நிலைமையை மேலும் விரிவுபடுத்தி, உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் அரங்கில் இன்று (08) இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின தேசிய விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
2023 ஆம் ஆண்டிற்காக, மகளிர் விவகார அமைச்சு “அவள் தேசத்தின் பெருமை” என்ற தொனிப்பொருளின் கீழ் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடுகிறது. இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய பாடுபட்ட இராஜாங்க அமைச்சர், செயலாளர் மற்றும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மூன்று பெண்கள்
இராஜாங்க அமைச்சர் பாரிய வேலைத்திட்டங்களைப் பொறுப்பேற்று, நாடு முழுவதும் சென்று பணிகளைத் தொடர்கிறார். 2022 சர்வதேச மகளிர் தினத்திற்கும் 2023 சர்வதேச மகளிர் தினத்திற்கும் இடையே, நாட்டில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சியே இதற்கு முக்கிய காரணம். பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, இந்த நாட்டு மக்கள் படும் துன்பங்களை நான் இந்த நேரத்தில் நினைவுகூரத் தேவையில்லை.
இதனை யார் பொறுப்பேற்க வேண்டும் என்ற விவாதம் தற்போது நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பல்வேறு பெயர்கள் கூறப்படுகின்றன. அந்தப் பெயர்களை நான் குறிப்பிடவில்லை என்றாலும். அவர்களில் ஒரு பெண்ணின் பெயர் கூட இல்லை என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.
எனவே இந்த சம்பவத்தை பெண்கள் பொறுப்பேற்கத் தேவையில்லை. எமக்கு ஆதரவளிக்கும் நாடுகளுடனும், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும் கலந்தாலோசித்து கடன் மறுசீரமைப்பு தொடர்பான எமது உடன்பாட்டை அறிவிக்கும் கடிதத்தில் நானும் மத்திய வங்கியின் ஆளுநரும் கையெழுத்திட்டோம்.
மேலும், அதற்கு சர்வதேச நாணய நிதியம் நேற்று நல்ல பதிலை வழங்கியிருந்தது. கடந்த காலங்களில் நாம் அனுபவித்த துன்பங்களில் இருந்து மக்களை விடுவிக்க உழைத்தவர்களின் பெயர்களைக் கருத்தில் கொண்டால், மூன்று பெண்களின் பெயர்கள் இடம்பிடித்துள்ளன. அவர்களை முதலில் குறிப்பிட வேண்டும் என்று நான் நினைத்தேன்.
நிர்மலா சீதாராம்
நிர்மலா சீதாராம் தான் இந்தியாவின் நிதியமைச்சர். அவர்தான் பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் கலந்துரையாடி இலங்கைக்கு 03 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க தீர்மானித்தவர்.
அது, கடந்த ஏப்ரலில் நாங்கள் வங்குரோத்தாகிவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு நடந்தது. வங்குரோத்தான நாட்டுக்கு கடன் கொடுப்பது மிகவும் துணிச்சலான செயல் ஆகும். எனவே முதலில் அவருக்கு நன்றி கூற வேண்டும்.
அந்த 03-04 மாதங்களில், அந்த 03 பில்லியன் ரூபா கிடைக்கவில்லை என்றால் இன்று நாட்டின் நிலைமையை நான் சொல்ல வேண்டியதில்லை. இரண்டாவதாக, பல முக்கிய நாடுகளுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
ஜெனட் யெலன்,கிறிஸ்டலினா ஜோர்ஜீவா
அந்த நாடுகளில், முக்கியமான நாடு அமெரிக்கா. இதற்கு அந்நாட்டின் திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தலைமை தாங்கினார்.அவருக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும்.
பல்வேறு நாடுகள், பாரிஸ் கிளப், உலக வங்கி உட்பட அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, தலைமையேற்று தனிப்பட்ட ரீதியில் தியாகத்துடன் செயற்பட்டார் என்பதை நான் குறிப்பிட வேண்டும்.
இந்த மூன்று பெண்களும் எங்களுக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால், நாங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருப்போம். ஒருபுறம், இந்தப் பிரச்சினைக்குக் காரணமானவர்களில் பெண்கள் ஒருவரும் இல்லை என்பதுடன் மறுபுறம், உதவியவர்களில் பெண்களும் உள்ளனர். இந்த மூன்று பெண்களின் மீது கவனம் செலுத்தும்போது, இந்தப் பெண்கள் ஏன் இந்த இடங்களில் இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
ஏன் நம் நாட்டில் இவ்வாறானவர்கள். இவர்கள் மூவர் மட்டுமல்ல, ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேன் மற்றுமொரு பெண். ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்திய வங்கியின் ஆளுநர் கிறிஸ்டின் லகார்ட் மற்றொரு பெண் ஆவார்.
அமெரிக்க திறைசேரி
சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க திறைசேரி அனைத்தும் இன்று பெண்களின் கைகளில் உள்ளன. பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்த பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக வர்த்தக அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஒகோன்ஜோ இவேலா போன்று, உலக உணவுத் திட்டத்தின் புதிய பணிப்பாளர் சிண்டி மெகெய்ன் ஆகியோர் பெண்கள் ஆவர்.
எனவே, எங்களுக்கு உணவு மற்றும் உதவி வழங்கும் இந்த பொருளாதாரத் துறையில் பெரும்பாலான பணிகள் பெண்களின் தலைமையின் கீழ் இயங்குகின்றன. இந்த 50 வருடங்களில் பெண்கள் முன்னேற்றம் அடைந்திருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடையலாம். ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் அவர்கள் பின்பற்றிய கொள்கைகளினாலேயே இது நடந்தது.
குறிப்பாக, பெண்களின் உரிமைகளை மேம்படுத்தும் திட்டங்களை நாம் தொடங்கினோம். அதுதான் இலங்கைக்கும் ஆசிய நாடுகளுக்கும் உள்ள வித்தியாசமாகும். இலங்கை குறித்து நாம் கவனம் செலுத்தும் போது 92 வருடங்களுக்கு முன்னர் எமது முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவுசெய்யப்பட்டார். 1960 ஆம் ஆண்டு உலகின் முதல் பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்கா தெரிவானார். ஆனால் நாம் முன்னேற்றம் அடையவில்லை.
பாலினம் மற்றும் சமத்துவ சட்டம்
2023 முதல் 2033 வரை “பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான தேசியக் கொள்கை” மற்றும் “பெண்கள் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான தேசியக் கொள்கை” ஆகிய இரண்டும் தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த செயற்பாடுகளை இத்தோடு நாம் நிறுத்த மாட்டோம். இது குறித்து விரிவாக ஆராய்ந்து, இதில் சேர்க்கப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து யோசனைகளைப் பெறுவோம்.
அத்துடன் நாடாளுமன்ற மகளிர் அமைப்புடன் கலந்துரையாடி எமது வேண்டுகோளின் அடிப்படையில் 03 வரைவுகள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று பாலினம் மற்றும் சமத்துவ சட்டம், மற்றொன்று பெண்களை வலுவூட்டும் சட்டம் மற்றும் தேசிய ஆணைக்குழு. இவை குறித்து இந்த மாதத்திற்குள் ஆராய்ந்து குறைந்தபட்சம் ஜூன் மற்றும் ஜூலைக்குள் சட்டமாக்க வேண்டும்.
இது தவிர அரசாங்கத்துடன் தொடர்பில்லாத மக்கள் சபைகள் தொடர்பான சட்டமூலத்தையும் கரு ஜயசூரிய தயாரித்து வருகின்றார். அவருடன் கலந்துரையாடி அதில் பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளை உள்ளடக்குமாறு நாடாளுமன்றதில் உள்ள மகளிர் குழுவிற்கும் அமைச்சிற்கும் பரிந்துரைத்துள்ளேன். அத்தோடு, பெண்கள் மற்றும் பாலினத்திற்கான ஒரு நிறுவனத்தை உருவாக்க எதிர்பார்த்துள்ளோம்." என தெரிவித்தார்.
