இலங்கையில் பாதுகாப்பு படையினரால் நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள் - பிரிட்டன் அரசாங்கம் தீவிர அவதானம்
இலங்கையில் பாதுகாப்புப்படையினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தியிருப்பதாக பிரிட்டன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து பிரிட்டன் அரசாங்கம் தீவிரமாகக் கவனம் செலுத்தியிருப்பதாக பிரிட்டன் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அமன்டா மில்லிங் (Amanda Milling) தெரிவித்துள்ளார் .
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் டோனியா அன்டோனியாசி எழுப்பிய கேள்விக்கு வழங்கியுள்ள எழுத்துமூல பதிலில் அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கைக்கான சமீபத்தைய விஜயத்தின் போதுஅமைச்சர் தாரிக் அகமட் இலங்கை தலைவர்களுடன் இந்த விவகாரங்கள் குறித்து பல முறை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரங்களின் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் பிரிட்டனிற்கான இலங்கை தூதுவருடனும் இலங்கை வெளிவிவகார அமைச்சருடனும் பல தடவை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இலங்கைக்கு ஜனவரி18 ம் திகதிமுதல் 20 திகதி வரை மேற்கொண்ட விஜயத்தின் போது அரச தலைவர் வெளிவிவகார அமைச்சர் அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்களை சந்தித்தவேளை மோசமடைந்து வரும் மனித உரிமை குறித்து அவர் கேள்வி எழுப்பினார் என அமன்டா மில்லிங் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 26ம் திகதிவெளிவிவகார அமைச்சர் ஜிஎல்பீரிசினை சந்தித்தவேளை வெளிவிவகார அமைச்சர் இது குறித்து கேள்வி எழுப்பினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவையினால் ஆணைவழங்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரத்தைக் கண்காணிப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
