வெளிநாடொன்றில் இருந்து வந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம்
சிறிலங்கா வந்த சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவிலிருந்து சிறிலங்காவிற்கு சுற்றுலாவிற்காக வந்திருந்த தம்பதியினர் மீதே பெந்தோட்டை பிரதேசத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா வழிகாட்டிகள் ஈடுபட்டிருக்கலாம்
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சுற்றுலா வழிகாட்டிகள் குழுவொன்று ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றனர்.
இதனால் குறித்த குழுவினர் விசாரணைகள் முடிவடையும் வரை பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியினை சிறிலங்கா சந்தித்து இருக்கின்ற வேளை நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மீது இவ்வாறு நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் சுற்றுலாத்துறையினை பாதிக்கும் எனவும் அமைச்சர் கூறினார்.
இது சாதாரண விடயம் இல்லை
இது சாதாரண விடயம் இல்லை என்றும் இது தொடரும் பட்சத்தில் இவை பாரிய விளைவுகளை உண்டுபண்ணும் எனவும் அவர் கூறினார்.
இவற்றை இல்லாது செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதன் பொருட்டு இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.