உயிரைப் பணயம் வைத்து நகரும் யாழ்.மத்தியின் போக்குவரத்து
உலகமயமாக்கலின் விளைவு எவ்வளவு மோசமானது என வீதியில் வந்து பார்த்தால் புரியும். காலையில் எழுவதே பெரிய விடயமாகிப்போயுள்ள இந்த சூழல் நிலையில் வீதிப்போக்குவரத்து பெரும் சிரமத்தையும் - அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் காலையில் எழுந்தது முதல் தூக்கத்திற்கு செல்லும் வரையில் விபத்துக்களும் சாவுகளுமே பத்திரிகைகள் - செய்தித் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் முதல்நிலை செய்திகளாக இடம்பிடிக்கின்றன.
மக்கள் மத்தியில் வெறுப்பான - வேண்டத்தாக ஒரு செய்திகளாகவே மாறிவருகின்றமை காணமுடிகின்றது. எப்போது பார்த்தாலும் பழைய பல்லவியே பாடவேண்டியுள்ளது.
இந்த விபத்துச் சம்பவங்களை சற்று நிதானமாகவும் - விரிவாகவும் உற்றுநோக்க வேண்டிய தேவையும் கடப்பாடும் ஏற்பட்டுள்ளது. தினமும் நடப்பது தானே என தட்டிக் கழிக்க முடியாது. ஒரு உயிரின் மதிப்பு எவ்வளவு என சொந்தங்களுக்குத்தான் தெரியும்.
உலகப்பரப்பில் நோக்கினால் அதிகளவான வீதி விபத்துக்கள் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஏற்படுவதை காணமுடிவதில்லை. ஆனால் இந்தியா - இலங்கை போன்ற நாடுகளில் திரும்பும் முடக்குகளில் எல்லாம் விபத்துக்கள் மலிந்துபோயுள்ளமை மறைக்க முடியாத உண்மை.
இலங்கையைப் பொறுத்த வகையில் விபத்துக்களுக்கு குறைவே இல்லை என்று கூறுவதே சாளப் பொருத்தம் - வாகன ஓட்டங்களும் - தலைதெறிக்கும் சவாரிகளுமே அநியாய சாவுக்கு காரணமாகின்றது. அதிகாலை வேளைகளிலும் - அலுவலகப் பயணங்கள் இடம்பெறும் நேரத்திலுமே அதிகளவான விபத்துக்கள் நடந்தேறுகின்றன.
இதன்பொருட்டு அரசாங்கமும் காவல்துறையினரும் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தபோதிலும் வாகன சாரதிகள் திருந்துவாதாக இல்லை.
நாட்டில் கடந்த இரண்டு ஆண்டகளில் நடந்தேறிய விபத்துக்கள் தொடர்பில் நெடச்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டக் பெர்னாண்டோ கருத்து வெளியிடுகையில்,
“2020ஆம் மற்றும் 2021 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்தக் கொண்டே செல்கின்றது. 2020ஆண்டு நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட விபத்துக்கள் 308ஆக பதிவாகியிருந்தது. 2021ஆம் ஆண்டும் நெடுச்சாலை விபத்துக்கள் 461ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 2020 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 66,252 என்றும் 2021 ஆம் ஆண்டில் அவர்களுக்கு எதிராக 79,904 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என அவர் தெரிவித்துள்ளளார்.
இதற்கெல்லாம் முக்கிய காரணங்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் - கவனயீனமாக வாகனம் ஓட்டுதல் - அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் - சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் - தொலைபேசிகளில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல் போன்றவற்றின் மூலமே ஏற்படுகின்றது.
கவனிப்பார் அற்ற நிலையில் யாழ்.நகர் பகுதி போக்குவரத்துக்கள்
யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் மக்களின் தேவைகளை விட அதிகளவான வாகனங்கள் பாவனையில் உள்ளதாக புள்ளிவிபரங்கள் அதிர்ச்சித் தகவல்கள் கூறுகின்றன. அது என்னவோ உண்மைதான். ஒரே வீட்டில் மோட்டார் சைக்கிள் - கார் என தேவைக்கு அதிகமாக உள்ளமை காணமுடியும். காரணம் ஆடம்பரம் என்ற சொல்வதில் மிகையாகாது.
பேருந்துப் பயணங்களை சொல்லவே தேவையில்லை. சவாரி விடுவதில் யாழ்ப்பாண சாரதிகளை விட சிறந்த சாரதிகளை காணமுடிவதில்லை.
தனியார் - அரச பேருந்து சாரதிகளின் போட்டியில் மாட்டிக் கொண்டு உயிரைப் பணயம் வைத்துகொள்வது அப்பாவி பொதுமக்களே!
வீதி விதிமுறைகளை பின்பற்றி பயணிப்பது என்பது கடுமையான சிக்கல்களே - “நின்ற வெள்ளத்தை வந்த வெள்ளம் இழுத்துப் போகுமாம்” என்ற நிலையில் யாழ்ப்பாண சாரத்தியம் உள்ளது. அதிகாரிகளை குற்றம் சொல்வதில் எந்தப்பயணும் இல்லை. மக்கள் முதலில் திருந்த வேண்டும். அப்படி திருந்தாதுவிடத்து சட்டம்தான் செயற்பட வேண்டும்.
மாநகர சபைக்கு ஒரு மடல்
யாழ்.மத்தியிலுள்ள கடைகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு முன்னால் பெருமளவான வாகனங்கள் தரித்த நிற்கின்றன - இது தொடர்பாக அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும். ஒற்றை நாள் - இரட்டை நாள் என வீதிக்கு வீதி பதாகைகளை மாட்டிக் கொண்டால் கடமை முடிந்துவிட்டது என பெருமூச்சு விடுவதை விடுத்து களமிறங்கிப் பணியாற்ற வேண்டும். அதற்காக 24மணிநேரமும் பணியைப் கட்டிப்பிடித்தக்கொண்டு இருப்பது என்று அர்த்தமில்லை.
அதிகமாக காலை நேரங்களில் இது தொடர்பாக கவனம் செலுத்தினாலே போதும். மக்களை திருத்த முடியாது என்பது யதார்த்தம் தான் - திருந்துங்கள் என்று சொல்லது அதிகாரிகளின் கடமையல்லவா? அதற்காக மாநகர சபையினர் மட்டும் பொறுப்பாளிகள் அல்ல - யாழ்காவல்துறையினரிடமும் சில பணிகளை ஒப்படைக்கலாம்.
யாழ்.மத்தியிலுள்ள பிரதான வீதிகளில் வாகனங்களின் சவாரிகளை கட்டுப்படுத்த பொருத்தமான விமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். வாகனங்களை வீதிகளில் நிறுத்தி வைப்பது தொடர்பில் கூடுதல் கவனம் தேவைப்படுகின்றது.
கஸ்தூரியார் வீதி - ஸ்ரான்லி வீதி - மின்சார நிலைய வீதி - மணிக்கூட்டுக் கோபுர வீதி - பிரதான சந்தை வீதி - வைத்தியவாலை வீதி போன்றவற்றில் போக்குவரத்து என்பது பெரும் நெருக்கடியான கட்டத்திலேயே உள்ளது.
இந்த போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காணவேண்டியது யாழ்.மாநகர சபை மற்றும் காவல்துறையினரின் தலையாய கடமையாகியுள்ளது.