சுகாதார நிபுணர்களின் கைகளிலேயே பயணத்தடை தளர்வு முடிவு - இராணுவத்தளபதி தெரிவிப்பு
நாட்டில் கொரோனா தொடர்பில் எந்தவொரு தீவிரமான சூழ்நிலையும் இல்லை என்பதை சுகாதார நிபுணர்கள் உறுதிப்படுத்தினால் மட்டுமே தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் 14 ஆம் திகதி தளர்த்தப்படும் என கொவிட் 19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இது தொடர்பாக சுகாதார நிபுணர்களுடன் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று இராணுவத் தளபதி கூறினார். மேலும் பயணத்தடையை தளர்த்துவதற்கு முன்னர் கொவிட் பரவுவது குறித்து விரிவான அறிவியல் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது நடைமுறையில் உள்ள பணயத்தடை எதிர்வரும் 14 ஆம் திகதி தளர்த்தப்பட உள்ளது. இதற்கிடையில், கொவிட்டின் தற்போதைய பரவலைக் கருத்தில் கொண்டு பயணக் கட்டுப்பாடுகள் இந்த மாதம் 21 ஆம் திகதிக்கு நீடிக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே பல மருத்துவ நிபுணர்கள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொவிட் விரிவாக்கம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நாட்டின் 11 மாவட்டங்களில் உள்ள 189 கிராம சேவகர் பிரிவுகளில், 77 பிரிவுகள் நேற்று (7) முதல்
தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.. கொவிட் 19பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல்பாட்டு மையம், தனிமையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும், அந்த பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.