திறைசேரி கடன் விவகாரம் தொழில்நுட்பப் பிழையல்ல: அரசாங்கத்தை சாடிய நாமல்
நாட்டின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான திறைசேரி கடன் திசைதிருப்பல் விவகாரம் வெறும் தொழில்நுட்பப் பிழையல்ல என சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
இது 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பொது நிதி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பொது நிதி பொறுப்புக்கூறல் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது X சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நிர்வாக செயலாக்கம்
தொடர்ந்து பேசிய அவர், “நாட்டின் நிதி ஒழுக்கவடிவமைப்பை பாதிக்கும் இத்தகைய நடவடிக்கைகள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

நிதி அமைச்சர், சட்டத்தின் 4 மற்றும் 28 ஆம் பிரிவுகளின் கீழ் நிதி மேற்பார்வை மற்றும் செலவின அங்கீகாரங்களுக்கு பொறுப்பானவர்.
அதேபோல், திறைசேரி செயலாளர், 5, 29 மற்றும் 36 ஆம் பிரிவுகளின் கீழ் செயல்பாட்டு கட்டுப்பாடுகள் மற்றும் கணினிமயமான பொது நிதி அமைப்புகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியவர்.
பொது நிதிகளை கையாளும் அமைப்பில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக முன்பே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதிலும், அதே அமைப்பு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டிருந்தால், கொள்கை முடிவுகள் மற்றும் நிர்வாக செயலாக்கம் ஆகியவற்றை தனித்தனியாகப் பிரித்து பொறுப்பிலிருந்து விலக முடியாது.
விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்
எனவே, இரு தரப்பினரின் பொறுப்பும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை சோதிக்கும் முக்கிய விவகாரமாகும்.

மேலும், பொது இடங்களில் வலியுறுத்தப்படும் அதே பொறுப்புக்கூறல் தரநிலைகள், ஒரு முறைப்பாடு அதிகாரப்பூர்வமாக முன்வைக்கப்பட்ட பின்னரும், விசாரணைகளில் பெயர்கள் வெளியாகும் சூழலிலும் சமமாகப் பயன்படுத்தப்படுமா என்பதே இங்கு எழும் முக்கிய கேள்வியாகும்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |