நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி - ஈகைப்பேரொளி முருகதாசனுக்கு ஐ.பி.சி தமிழின் இதயம் கனிந்த நினைவேந்தல்
தமிழர் மனங்களில் என்றும் அழியாத நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்திக்கும், ஈகைப்பேரொளி முருகதாசனும்,ஐ.பி.சி தமிழ் ஊடக கலையகத்தில் கனிந்த உணர்வுகளுடன் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
ஐ.பி.சி தமிழ் ஊடக கலையகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், ஐ.பி.சி தமிழின் நிர்வாகத்தினரும், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டு தங்கள் மரியாதையையும் நினைவுகளையும் செலுத்தினர்.
நிகழ்வின் தொடக்கத்தில் இருவரின் திருவுருவப் படங்களுக்கு மலர்மாலை அணிவித்து, இரங்கல்மிகு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சத்தியமூர்த்தி – ஊடக நேர்மையின்
“ஊடகம் என்பது ஒரு அடையாளம்” என்று சொல்லப்படும். உண்மையை உள்ளபடி சொல்லும் தைரியம், நேர்மையின் பக்கம் நின்று சமூகத்துக்கு வழிகாட்டும் பொறுப்பு. அவை அனைத்தும் ஜனநாயகத்தின் கண்களாக திகழ்கின்றன.

அந்த உயரிய பணியை தமது உயிரை பணயம் வைத்து செய்தவர்களில் முக்கியமானவர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி.
மட்டக்களப்பை பூர்வீகமாகக் கொண்ட அவர், தாயகத்தின் ஊடக உலகில் தனித்துவமான குரலாக விளங்கினார்.
தமிழினம் எதிர்கொண்ட நசுக்கல்களையும், மக்களின் வலிநிறைந்த வாழ்வையும் உலகறியச் செய்த ஊடகப் போராளி அவர்.
ஒரு செய்தியாளராக மட்டுமல்ல, ஒரு உணர்வுள்ள தமிழனாக அவர் தனது கடமையை ஆற்றினார்.
செய்திப்பார்வைகள், அரசியல் கலந்துரையாடல்கள், உள்ளூர் சமூக விவாதங்கள் என பல்வேறு தளங்களில் அவர் வெளிப்படுத்திய பகுப்பாய்வு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
தமிழ் ஊடக அறிவியல் கல்லூரியின் தோற்றத்திலிருந்து அதன் இறுதிக்காலம் வரை அவர் இணைந்திருந்த பணி, எதிர்கால ஊடகவியலாளர்களுக்கான ஒளிக்கோபுரமாக அமைந்தது.
தான் நம்பிய உண்மையை வெளிப்படுத்துவதில் ஒருபோதும் பின்னடையாத சத்தியமூர்த்தி, யுத்தம் உச்சத்தை எட்டிய அச்சநேரத்திலும் ஒதுங்காமல் பணியாற்றினார்.
எறிகணை தாக்குதலில் உயிர்நீத்த அவர், ஊடகப் பொறுப்பின் சின்னமாகவே நினைவில் நிற்கிறார்.
அவரது மறைவுக்குப் பின் “நாட்டுப்பற்றாளர்” என்ற கௌரவ நாமம் வழங்கப்பட்டது என்பது அவரது அர்ப்பணிப்புக்கான சமூகத்தின் மரியாதையாகும்.
அவர் விட்டுச் சென்ற வெற்றிடம், அது ஒரு மனிதரின் இழப்பு மட்டுமல்ல; தமிழ் ஊடக உலகின் இதயத் துடிப்பில் உருவான பேரிழப்பாகும்.
ஈகைப்பேரொளி முருகதாசன்
தீயில் எழுந்த நியாயக் குரல் 2009 – தமிழர் வரலாற்றின் இருண்ட அத்தியாயம். அந்த வேதனையின் நடுவில், “சர்வதேசமே, ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்!” என்று உலக மனசாட்சியை உலுக்கிய குரலாக எழுந்தார் முருகதாசன்.
ஜெனீவா மனித உரிமை முன்றலில், 2009 பிப்ரவரி 12 ஆம் திகதி, தன்னுடைய 7 பக்க மரண சாசனத்தை எழுதி வைத்து, தமிழினத்தின் வேதனையை உலகுக்கு அறிவிக்கும் கடைசி முயற்சியாக தன்னையே தீயிற்கு ஆகுதியாக்கினார்.
அது ஒரு உயிரின் முடிவு மட்டுமல்ல, உலக நியாயத்தைக் கேட்க எழுந்த தீக்குரல். ஈழத்தமிழர்களுக்கான சர்வதேச நீதியை வலியுறுத்தி தன்னை ஈகமாக்கிய முருகதாசன், “ஈழதாசன்” என தமிழர் இதயங்களில் நிலைத்திருக்கும் ஒரு சின்னமாக மாறினார்.
தன் உடலை எரியும் நெருப்பின் பசித்த நாவிற்கு அர்ப்பணித்த அந்த தியாகம், இன்றளவும் மனங்களை நடுங்கச் செய்கிறது.
இவ்வாறான போற்றக்கூடிய மிகு மாந்தர்களை இன்றைய நாளில், ஐ.பி.சி தமிழ் கனிந்த இதயங்களுடன் நினைவு கூர்கிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |








