திருமலை புத்தர் சிலை விவகாரம் : கஸ்ஸப தேரர் உள்ளிட்டோர் நீதிமன்றில்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
குறித்த விவகாரத்துடன் தொடர்புடைய பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று (11) காலை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் அரசியலமைப்பு புத்தகத்துடன் நீதிமன்றத்திற்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றத்திற்கு வந்த கஸ்ஸப தேரர்
திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்டதாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது.

இந்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு இன்று (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், பலாங்கொடை கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவங்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
மேலதிக தகவல் - NICKEY THOMSON
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |