முத்துநகர் நிலப்பிரச்சினை: அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
திருகோணமலை - முத்துநகர் பகுதியில் நிலம் தொடர்பான பிரச்சினை 2025 ஜூலை 29 ஆம் திகதியே அடிப்படையாகத் தீர்க்கப்பட்டிருந்த போதிலும், அண்மையில் ஜனாதிபதி செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.
அவரின் அறிக்கையில், மொத்த நிலப்பரப்பில் சுமார் 10% சூரியகல மின்சக்தி நிறுவனங்களால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற தடையுத்தரவு காரணமாக சில குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, நீதிமன்றத் தடையில்லாத மற்றும் வழக்குகள் இல்லாத பிற நிலங்கள் அனைத்தும் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கி நிலங்களை திருப்பி அளிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் ஆதரவு
பிரச்சினை தீர்ந்திருந்த போதிலும் சில குழுக்கள் இன்னும் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும், அவர்களின் நோக்கம் பிரச்சினையைத் தீர்ப்பதல்ல, நாட்டில் குழப்பம் ஏற்படுத்துவதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இத்தகைய தவறான தகவல்களுக்கு ஆளாகாமல், சட்டத்தை மதிக்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும், தேசிய நிலைத்தன்மையை உறுதிசெய்யும் தீர்வுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
