துர்நாற்றம் வீசும் பெட்டிகள் - துருப்பிடித்த கழிவறைகள்: திருகோணமலை - கல் ஓயா தொடருந்து சேவையின் மோசமான நிலை
திருகோணமலைக்கும் கல் ஓயா சந்திக்கும் இடையில் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பயணிகளுக்காக இயக்கப்படும் இணைப்பு தொடருந்து சேவையானது தற்போது மிகவும் மோசமான நிலையில் இயங்கி வருவதாக பயணிகள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், தொடருந்தின் மலசல கூடம் பயன்படுத்தவே முடியாத அளவிற்கு துருப்பிடித்து சுகாதாரமற்ற நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளே நுழைய முடியாத அளவிற்கு வீசும் துர்நாற்றம் மற்றும் முறையற்ற நீர் விநியோகம் என்பன பயணிகளை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளன.
பழமையான பெட்டி
சேவையிலிருந்து நீக்கப்பட வேண்டிய பழமையான பெட்டிகளே இச்சேவையில் பயன்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருக்கைகள் கிழிந்தும் அழுக்கடைந்தும் காணப்படுவதுடன் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் கால்களை வசதியாக வைக்க முடியாத அளவுக்கு இருக்கைகள் நெருக்கமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பல பெட்டிகளில் கதவுகள் இல்லாமலும் ஜன்னல்களை மூட முடியாத நிலையிலும் இருப்பதால் பயணிகளின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திருகோணமலை தொடருந்து நிலைய அதிபர் மற்றும் தொடருந்து திணைக்கள அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்தி தரமான பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கிளீன் சிறிலங்கா திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் இவ்வாறாக தொடருந்து காட்சியளிப்பது பெரும் கவலையளிப்பதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





தியாக தீபத்திற்கான மெய்யான அஞ்சலி, தமிழர் ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் இருப்பதாகும்... 20 மணி நேரம் முன்