இரகசியத் தகவலையடுத்து வசமாக சிக்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர்!
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-மட்கோ,மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த ஏ.துலாஜ் மதுசங்க 30வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் சென்ற மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது அவரிடமிருந்து 14 கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
குறித்த நபர் திருகோணமலை சிறைச்சாலையில் கடமையாற்றி வரும் ஜெயிலர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட நபரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
