புத்தர் சிலை விவகாரத்தில் சுமோ - சாணக்கியனின் சுயநல அரசியல்: சட்டத்தரணி பகிரங்கம்!
புத்தர்சிலை விவகாரம் இலங்கையில் இரண்டு தேசம் இருப்பதை உறுதிசெய்கின்றது என அரசியல் ஆய்வாளரும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று (22) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்த விடயத்தின் பின் கருத்து தெரிவித்த சுமந்திரன் அனைத்து வட கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவேண்டும் என்று சொல்லியிருந்தார்.
ஆக்கிரமிப்பு பிரச்சினை
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா உடனடியாக தமது கட்சியில் சேர வேண்டும் என்று சொன்னார்.
இவ்வாறு கூடியவர்கள் சஜித் பிரேமதாச கூறிய கூற்றிற்கு எதிராக ஒரு அறிக்கை கூட விடவில்லை, இவ்வளவிற்கும் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்கச் சொன்னவர்கள் இவர்கள்தான், இதில் அவர்கள் இரண்டு மனோநிலையில் இருந்து தமது அறிக்கைகளை வெளியிட்டதை பார்க்க முடிகின்றது.

இந்த புத்த விகாரை விவகாரங்களில் ஒரு ஆக்கிரமிப்பு பிரச்சினை, சட்டப்பிரச்சினை மற்றும் ஒரு அரசியல் பிரச்சினையும் இருக்கிறது.
ஆக்கிரமிப்பு பிரச்சினை தான் தமிழ் மக்கள் கரிசனை கொள்ளக்கூடிய விடயம். ஏனெனில் திருகோணமலை மாவட்டம்தான் முழுமையாக ஆக்கிரமிப்பிற்கு உட்பட பிரதேசம், நான் ஏற்கனவே கூறியது போல திருகோணமலை மாவட்டத்தில் எல்லாவிதமான ஆக்கிரமிப்புக்களும் பரீட்சித்து பார்க்கப்பட்டது.
ஆக்கிரமிப்புக்கள்
அங்கு சட்டவிரோத குடியேற்றம், திட்டமிட்ட விவசாய குடியேற்றம், திட்டமிட்ட மீனவக் குடியேற்றம், முப்படை பண்ணைகளுக்கான குடியேற்றம், வியாபார குடியேற்றம் மற்றும் புனித பிரதேச குடியேற்றம் என ஏல்லாமே பரீட்சித்து பார்க்கப்பட்டது.
திருகோணமலை நகரத்தை பொறுத்தவரை அங்கு நடந்த ஆக்கிரமிப்புக்கள் எல்லாமே சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கள்தான், எதுவும் சட்டரீதியாக இடம்பெறவில்லை மற்றும் கோணேசர் கோயில் சூழலை பொறுத்தவரை அங்கு பச்சை ஆக்கிரமிப்பு, கோணேஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள காணிகள் எல்லாம் மன்னர் காலத்தில் மன்னர்களால் கோயிலுக்காக கொடுக்கப்பட்ட காணிகள், அதனை போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலத்தில் அவர்கள் அக்காணிகளை எடுத்துள்ளனர். அதில் பல அரசு அபகரித்தது.

ஆகவே பூர்வீக காணிகள் அரசிற்கு கிடையாது. அதிலும் 2014 ஆம் ஆண்டு புத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் மகிந்த ராஜபக்சவால் அளிக்கப்பட்ட ஒரு பத்திரம் மூலம்தான் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகவே இது முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசம். ஆகவே இவ்வாறான ஆக்கிரமிப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றது என்பதை வெளியில் கொண்டுவரப்பட வேண்டும்.
இரண்டாவது சட்டப்பிரச்சினை இன்று மக்கள் தமது சொந்த ஆதனத்தில் ஒரு மதிலை கட்டுவது என்றாலே பிரதேச சபை அனுமதி பெறப்படவேண்டும், அந்த வகையில் குறித்த பகுதி திருகோணமலை மாநகராட்சி மன்ற அனுமதியோ அல்லது கரையோர திணைக்கள் அனுமதியோ பெற்றுக்கொள்ளவில்லை, இவர்கள் இரவிரவாக புத்தர் சிலையை கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். இது ஒரு பச்சை ஆக்கிரமிப்பு மீண்டும் ஒருமுறை இடம்பெற்றதாகவே பார்க்கவேண்டும்.
புத்தர் சிலை
அரசாங்கத்தின் போதைவஸ்து மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளால் சிங்களவர்கள் ஆடிப்போயுள்ளார்கள், தங்கள் மீதும் இந்த சட்டம் பாயும் என்கின்ற அச்சத்தோடு இருக்கின்றார்கள். அந்த அச்சம் காரணமாகவே நேற்றைய தினம் ஒரு ஆர்ப்பாட்டத்தை செய்திருந்தார்கள். ஆகவே அந்த ஆர்ப்பாட்டத்தை மேலும் பெரிதாக்குவதற்கே அந்த புத்தர் சிலை விவகாரத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள் என நான் கருதுகின்றேன்.
பேரினவாதிகள் தங்களது அரசியல் நலனுக்காகவே இதனை செய்திருக்கின்றார்கள் என்றே நாங்கள் பார்க்கின்றோம். ஆகவேதான் இந்த விவகாரத்தை மக்கள் மத்தியிலும் சர்வதேசத்திடமும் கொண்டுசெல்லவேண்டிய மிகப்பெரிய தேவை இருக்கின்றது.

ஆகவே தமிழ் தரப்புக்கள் இதனோடு சேர்த்து அரசு செய்த அனைத்த ஆக்கிரமிப்புக்களையும் ஆவணப்படுத்தி வெளியிடுவதால்தான் இந்த அரசு செய்கின்ற அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் அம்பலப்படுத்த முடியும்.
இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பொறுத்தவரை மிகவும் அச்சப்பட்ட ஒரு சூழலில் இருப்பதுபோல்தான் தெரிகின்றது, மாவீரர் தினத்தை அச்சமின்றி அனுஷ்டிக்க முடியும் என்றார்கள், பின்னர் பயங்கரவாதிகளை நினைவுகூர முடியாது என்றார்கள் மற்றும் அவர்கள் கார்த்திகை வீரர்கள் தினத்தை நினைவு கூருகின்றார்கள். ஆகவே இங்கு அவர்களுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |