சற்றுமுன்னர் திருகோணமலையில் கடும் பதற்றம்: குவிக்கப்பட்ட காவல்துறையினர்
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் தற்போது மீண்டும் பதட்ட நிலை உருவாகியுள்ளது.
திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே களத்தில் பெருமளவான பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த புத்தர் சிலையை அந்த இடத்திலேயே மீண்டும் வைப்பதற்கான முயற்சியை அங்கு கூடியுள்ள பௌத்த பிக்குகள் தற்போது தீவிரமாக முயற்சித்து வருவதாகவும் தெரியவருகின்றது.
மேலும், பெரும்பான்மை இன மக்களும் அதிகமாக அவ்விடத்தில் ஒன்று திரண்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ஹேமந்த குமார தலைமையில் தற்போது அவசர கூட்டம் ஒன்றும் நடைபெற்று வருகின்றது.
குறித்த கூட்டத்தில், புத்தர் சிலையை அங்கு வைப்பதற்கு வலியுறுத்தும் தேரர்கள் குழுவொன்றும் அழைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
மேலும், நேற்று இரவு சம்பவ இடத்தில் நடந்த பரபரப்பான நிலை காரணமாக, காவல்துறையினர் கன்னத்தில் அறைந்த பௌத்த பிக்கு உள்ளிட்ட இரண்டு பௌத்த பிக்குகள் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாங்களாகவே இவர்கள் வைத்தியசாலைக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரண்டு பௌத்த பிக்குகளும் சம்பவ இடத்திற்கு வர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், மாவட்ட செயலகத்தில் நடைபெறும் கூட்டம் நிறைவுற்ற பின்னரே முடிவுகள் தெரியவரும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நேற்று இரவ வைக்கப்பட்ட புத்தர் சிலை தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ள நிலையில், அதனை மீளவும் வைப்பதற்கான முயற்சியை சில பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பெரும்பான்மை இன மக்கள் கைவிடவில்லை என்றும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த இடத்தில் ஒன்றுதிரண்டுள்ள பௌத்த பிக்குகள் சிலர் அந்த காணிக்குரிய உறுதிப் பத்திரம் தம்மிடம் இருப்பதாக தெரிவித்து குழப்பத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்