ஸ்ரீலங்கா இராணுவத்தால் குமாரபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை- உறவுகளுக்கு தடை வித்தித்த பொலிஸார்!
குமாரபுரம் படுகொலை இடம்பெற்று 25ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. இந்நிலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் இவ்வருடம் அனுஸ்டிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் வருடம் தோறும் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் நினைவுத் தூபியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதோடு, அருகிலுள்ள ஆலயத்தில் பொங்கல் செய்து பிரார்த்தனையும் மேற்கொண்டு வந்தனர்.
இவ்வாறான நிலையில், இவ்வருடம் உறவுகளின் நினைவேந்தலுக்கு பொலிஸார் தடை விதித்ததுடன், கொரோனா சூழ்நிலையையும் காரணமாகத் தெரிவித்து ஒன்று கூடல்களுக்கு தடை எனத் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து நினைவுத் தூபியில் விளக்கேற்றி உறவுகள் மட்டும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திருகோணமலை கிளிவெட்டி குமாரபுரம் பகுதியில் 1996ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் துணைப்படைகள் மேற்கொண்ட படுகொலை சம்பவத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 36 பேர் வரை படுகாயமடைந்தனர்.
இப்படுகொலைகள் தொடர்பாக இராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, 2004ஆம் ஆண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற வழக்கில், 8 இராணுவ வீரர்கள் சந்தேகநபர்களாக இனங்காணப்பட்டனர்.
இருப்பினும் பின்னர் ஒருவர் நிரபராதியென விடுவிக்கப்பட்டதுடன் மற்றுமொருவர் இறந்துவிட்டார். தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், ஏனையவர்களும் குற்றமற்றவர்கள் என தெரிவித்து கடந்த 2016 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.