மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் : ஹோர்முஸ் நீரிணை மீதான முற்றுகைக்கு ட்ரம்ப் உத்தரவு
மத்திய கிழக்கில் பல வாரங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உடன்பாட்டை எட்ட, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சனிக்கிழமை ஈரானுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, "ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ முயற்சிக்கும் எந்தவொரு மற்றும் அனைத்து கப்பல்களையும்" அமெரிக்கா முற்றுகையிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
"முற்றுகை விரைவில் தொடங்கும். இந்த முற்றுகையில் மற்ற நாடுகளும் ஈடுபடுத்தப்படும். இந்த சட்டவிரோத மிரட்டிப் பணம் பறிக்கும் செயலால் ஈரான் இலாபம் ஈட்ட அனுமதிக்கப்படாது," என்று ட்ரம்ப் தனது 'ட்ரூத்' சமூக ஊடகத் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கு சுங்கம் செலுத்திய கப்பல்களை தேடிப்பிடிக்குமாறு உத்தரவு
போர் தொடங்கியதிலிருந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கான முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்களின் போக்குவரத்தை ஈரான் கட்டுப்படுத்தி வருகிறது.
மேலும், "சர்வதேச கடல் பகுதியில் ஈரானுக்கு சுங்கம் செலுத்திய ஒவ்வொரு கப்பலையும் தேடிப்பிடித்து இடைமறிக்குமாறு" அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டதாகவும் ட்ரம்ப் குறிப்பட்டார்.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, ஈரான் தனது "அணுசக்தி இலட்சியங்களைக்" கைவிட மறுத்துவிட்டதாக ட்ரம்ப் கூறினார். மேலும், அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அவரது மருமகனும் ஆலோசகருமான ஜாரெட் குஷ்னர் ஆகியோரிடமிருந்து பேச்சுவார்த்தைகள் குறித்து தனக்கு "முழுமையாக விளக்கமளிக்கப்பட்டது" என்றும் அவர் தெரிவித்தார்.
"பல வழிகளில், நமது இராணுவ நடவடிக்கைகளை இறுதிவரை தொடர்வதை விட, ஒப்புக்கொள்ளப்பட்ட அம்சங்கள் சிறந்தவை. ஆனால், இத்தகைய நிலையற்ற, கடினமான, கணிக்க முடியாத நபர்களின் கைகளில் அணுசக்தியை அனுமதிப்பதோடு ஒப்பிடும்போது, அந்த அம்சங்கள் எதுவும் முக்கியமில்லை," என்று அவர் கூறினார்.
ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சி தொடங்கும்
ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சிகள் தொடங்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். மேலும், "எங்கள் மீதோ அல்லது அமைதியான கப்பல்கள் மீதோ சுடும் எந்தவொரு ஈரானியரும் நரகத்திற்குச் சிதறடிக்கப்படுவார்கள்!" என்றும் அவர் எச்சரித்தார்.

"அவர்களின் கடற்படை அழிந்துவிட்டது, அவர்களின் விமானப்படை அழிந்துவிட்டது, அவர்களின் விமான எதிர்ப்பு மற்றும் ராடர் கருவிகள் பயனற்றவை, கொமேனியும், அவர்களின் பெரும்பாலான 'தலைவர்களும்' இறந்துவிட்டனர். இவை அனைத்தும் அவர்களின் அணுசக்தி இலட்சியத்தின் காரணமாகவே நிகழ்ந்தன," என்று அவர் கூறினார்.
அவர்களுக்குப் பணம் வேண்டும், அதைவிட முக்கியமாக, அவர்களுக்கு அணு ஆயுதம் வேண்டும். மேலும், ஒரு பொருத்தமான தருணத்தில், நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம், ஈரானில் எஞ்சியிருக்கும் கொஞ்சத்தையும் எங்கள் இராணுவம் முடித்துவிடும்!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |