மோடியின் முடிவால் ரஷ்யாவுக்கு பேரிடி! உச்சகட்ட மகிழ்ச்சியில் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே சமீபத்தில் தொலைபேசி மூலம் முக்கிய உரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்த உரையாடல் குறித்து டிரம்ப், தனது Truth Social சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தகவல் பகிர்ந்துள்ளார்.
அதில், பிரதமர் மோடியை தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவராக குறிப்பிட்டுள்ள அவர், அவருடன் பேசியது மகிழ்ச்சியும் பெருமையும் அளித்ததாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர்
இந்த உரையாடலின் போது, அமெரிக்கா–இந்தியா இடையேயான வர்த்தக உறவுகள், உலக அரசியலில் முக்கிய விவகாரமாக உள்ள ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
அதன்போது பிரதமர் மோடி, ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைத்து, அமெரிக்கா மற்றும் தேவையெனில் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் உக்ரைன் போரில் உயிரிழப்புகள் குறையவும், அமைதி நிலவவும் வாய்ப்பு ஏற்படும் என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரி குறைப்பு - வர்த்தக ஒப்பந்தம்
இந்த உரையாடலின் தொடர்ச்சியாக, அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் கிடைத்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளதுடன், ஒப்பந்தத்தின் படி, அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25 வீதத்திலிருந்து 18 வீதமாக குறைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்காவிற்கு எதிராக இந்தியா விதித்து வரும் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகள் பெரும்பாலும் நீக்கப்பட்டு பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி உள்ளிட்ட பல துறைகளில் 500 பில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை வாங்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்ததாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்பெறும் என்றும், பிரதமர் மோடியும் தானும் முடிவுகளை உருவாக்கும் தலைவர்கள் என்றும் ட்ரம்ப் தனது பதிவில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |